மவுனம் கலைக்கிறார் மோடி.. நாளை லோக்சபாவில் பதில் அளிக்கும் பிரதமர்! உறுதி செய்த ராஜ்நாத் சிங்!
டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை லோக்சபாவில் பதில் அளிப்பார் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் கலவரம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை மத்திய அரசு ஏற்காததால் 2 அவைகளையும் அமளி செய்து எதிர்க்கட்சிகள் முடக்கின.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய் விவாதத்தை தொடங்கினார்.
அமித் ஷா பதில்: இன்று ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பாஜக அரசை காட்டமாக விமர்சித்துப் பேசினர். மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடந்த இரண்டு நாட்களாக விவாதம் செய்த நிலையில் அதற்கு பதில் அளித்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் வன்முறை குறித்து உரையாற்றியபோது, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் எனக் கோரினார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி வந்து பேச வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம், மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு பதிலாக கோட்டை காவலர் வந்து பதில் சொன்னால் எப்படி? என கேள்வி எழுப்பினார்.
நாளை பிரதமர் பதில் உரை: இந்த நிலையில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் உரை வழங்குவார் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இன்று அமித் ஷா உரைக்குப் பிறகு லோக்சபா ஒத்தி வைக்கப்படுவதற்கு முன்பாக அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நாளை பதில் அளிக்க உள்ளதால் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதால் நாடாளுமன்றத்தில் நாளை அனல் பறக்கும் என உறுதியாகக் கூறலாம்.












Click it and Unblock the Notifications