பொங்கல் வாழ்த்தா தமிழில்.. ரம்ஜான் வாழ்த்தா உருதுவில்.. அசத்தும் பிரதமர்.. ராகுல்காந்தியும் வாழ்த்து
டெல்லி: பொங்கல் வாழ்த்து என்றால் அதை தமிழில் பதிவு செய்வது போல் ரம்ஜான் வாழ்த்தை உருதுவில் பதிவு செய்து பிரதமர் நரேந்திர மோடி அசத்தியுள்ளார். அது போல் ராகுல்காந்தியும் வாழ்த்து கூறியுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் ஆகும். இந்த மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு கடைப்பிடிப்பர். 30-ஆவது நாளில் பிறை தெரிந்தவுடன் அடுத்த நாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு இஸ்லாமியர்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று.
இந்த பண்டிகை ஈகை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் நேற்று முன் தினமே பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் நேற்றே ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பிறை தெரிந்ததால் இந்தியா முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.
Have a blessed Id-ul-Fitr. pic.twitter.com/71R9GMW3Tf
— Narendra Modi (@narendramodi) June 5, 2019
மும்பை, டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நன்னாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில் ரமலான் தினத்தில் நம் தாய்நாட்டில் நல்லிணக்கம், இரக்கம், கருணை, அமைதி ஆகியவற்றின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இந்த நன்னாளில் இன்பம் பெருக வேண்டும் என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, உருது மொழியிலும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
#EidMubarak and my best wishes to all on the auspicious occasion of #EidulFitr pic.twitter.com/0lBpD1SL3O
— Rahul Gandhi (@RahulGandhi) June 5, 2019
அது போல் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியும் வாழ்த்துச் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.