மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியிலும் சந்திரபாபு நாயுடுவை விட்டுத் தராத மோடி! என்ன சொன்னார் தெரியுமா?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தமது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியிலும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை பெருமிதத்துடன் குறிப்பிட்டுப் பேசினார். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிய அரசு அமைப்பதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முதன்மை காரணம் என்பதால் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியதாக தெரிகிறது.
இன்றைய மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பாரதத்தின் பல பொருட்களுக்கு உலகெங்கிலும் தேவை அதிகம் இருக்கிறது, நாம் நமது நாட்டின் உள்ளூர்ப் பொருட்கள் உலக அளவில் பரவலாக்கப்படுவதைக் காணும் போது, நெஞ்சம் கர்வத்தில் விம்முவது இயல்பான விஷயம் தானே!! இப்படிப்பட்ட ஒரு பொருள் தான் அரக்கு காப்பி. அரக்கு காப்பி, ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதா ராம ராஜு மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

இதன் செறிவான சுவையும் மணமும் உலகப் புகழ் வாய்ந்தவை. அரக்கு காப்பியின் சாகுபடியோடு சுமார் ஒண்ணரை இலட்சம் பழங்குடியினக் குடும்பங்கள் தொடர்புடையனவாக இருக்கின்றன. அரக்கு காப்பியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் கிரிஜன் கூட்டுறவுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இங்கிருக்கும் விவசாய சகோதர சகோதரிகளோடு இணைந்து இது செயல்பட்டு, அரக்கு காப்பியைப் பயிர் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தியது. இதன் காரணமாக இங்கிருக்கும் விவசாயிகளின் வருவாய் அதிகம் பெருகியது. இதனால் ஆதாயம் இங்கிருக்கும் கோண்டா டோரா பழங்குடியினச் சமூகத்துக்கும் கிடைத்திருக்கிறது. வருமானத்தோடு கூடவே அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு கௌரவமும் கிடைத்திருக்கிறது.
நானும் சந்திரபாபு நாயுடுவும்: ஒருமுறை விசாகப்பட்டினத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களோடு இந்தக் காப்பியைப் பருகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததை நான் இப்போது நினைவு கூருகிறேன். இதன் சுவையைப் பற்றி நான் என்ன சொல்ல, ஆஹா அற்புதம்!! மிகவும் அருமையான காப்பி!! அரக்கு காப்பிக்கு உலகளாவிய பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. டெல்லியில் நடந்த ஜி 20 உச்சிமாநாட்டிலும் கூட காப்பி எங்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. உங்களுக்கு எப்போது சந்தர்ப்பம் வாய்க்கிறதோ, அப்போது நீங்களும் கூட அரக்கு காப்பியை சுவைத்து மகிழுங்களேன்!!
ஜம்மு காஷ்மீர்: நண்பர்களே, உள்ளூர்ப் பொருட்களை உலகளாவிய அளவுக்குக் கொண்டு சேர்ப்பதில் நம்முடைய ஜம்மு கஷ்மீரைச் சேர்ந்தவர்கள் ஒன்றும் பின் தங்கிப் போனவர்கள் அல்ல. கடந்த மாதங்களில் ஜம்மு கஷ்மீர் சாதித்துக் காட்டியிருப்பவை, நாடெங்கும் இருக்கும் மக்களுக்கும் கூட ஒரு எடுத்துக்காட்டு. இங்கே, புல்வாமாவிலிருந்து அவரைக்காயின் முதல் தொகுதி லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கஷ்மீரில் விளையும் அரியவகைக் காய்கறிகளை ஏன் நாம் உலகிற்கு அறிமுகம் செய்யக்கூடாது என்ற எண்ணம் சிலர் மனங்களில் உதித்தது. அப்புறமென்ன!! சகூரா கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ராஷீத் மீர் அவர்கள் இதற்காக முதன்முதலில் முன்வந்தார். இவர் கிராமத்தின் பிற விவசாயிகளின் நிலங்களை ஒருங்கிணைத்து, அவரைப்பயிரை விளைவிக்கும் பணியைத் தொடக்கினார், சில காலத்திற்குள்ளாகவே அவரைக்காய் கஷ்மீரிலிருந்து லண்டனைச் சென்றடைந்தது. இந்த வெற்றி, ஜம்மு கஷ்மீரின் மக்களுக்கு வளங்களை அளிக்கும் புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. நம்முடைய நாட்டிலே இப்படிப்பட்ட தனித்துவமான பொருட்களுக்குக் குறைவேதும் இல்லை. நீங்கள் இப்படிப்பட்ட பொருட்களை #myproductsmypride என்பதில் கண்டிப்பாகப் பகிருங்கள். நான் இந்த விஷயம் தொடர்பாக வரவிருக்கும் மனதின் குரல் நிகழ்ச்சிகளிலும் விவாதிக்க இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications