உச்சத்தில் பிரதமர் மோடி! உலக அளவில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்!
டெல்லி: சர்வதேச அளவில் மிகவும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலை மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் தேர்தல்கள், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்த தரவுகளை வழங்கி வரும் தளமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு எந்தளவு செல்வாக்கு உள்ளது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.
கருணாநிதியின் 8 அடி முழு உருவ சிலை.. ஈரோடு மாவட்டத்தில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் முதலிடம்
இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 75 சதவீத மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். பிரதமர் மோடி இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். 2021 நவம்பர் மற்றும் 2022 ஜனவரி காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலும் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா, பொருளாதார சிக்கல் என அனைத்தையும் தாண்டி பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கு இந்தியாவில் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
அடுத்தடுத்த இடங்கள்
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். மெக்சிகோ அதிபர் ஒப்ராடோர் 63 சதவீத மக்கள் ஆதரவையும் இத்தாலி மரியோ டிராகி 54 சதவீத மக்கள் ஆதரவையும் பெற்று உள்ளனர். இந்தப் பட்டியலில் மொத்தம் 22 உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரேசில் அதிபர் போல்சனாரோ 42% மக்கள் ஆதரவுடன் நான்காம் இடத்தில் உள்ளனர்.
அமெரிக்கா
இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41% மக்கள் ஆதரவுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீத மக்கள் ஆதரவுடன் ஆறாவது இடத்திலும், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 38% மக்கள் ஆதரவுடன் ஏழாவது இடத்திலும் உள்ளனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 38% மக்கள் ஆதரவுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.
மார்னிங் கன்சல்ட்
உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வயது பல ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அந்தத்தந்த நாட்டின் மக்கள் தொகையைப் பொறுத்து கணக்கு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 வரை எடுக்கப்பட்டதாகும். இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருக்கும் அரசு குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் இந்த மார்னிங் கன்சல்ட் நிறுவனம் டேட்டா சேகரித்துச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.