பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக்! சோனியாவை புறம்தள்ளிய இந்தியா பாடம் கற்கணும்.. சசிதரூர் பரபர கருத்து
டெல்லி: இனவெறி இருந்த பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாளவளியை சேர்ந்த இந்து மதத்தை பின்பற்றும் ரிஷி சுனக் பிரதமராகி உள்ள நிலையில் சோனியாவை புறம்தள்ளிய இந்தியா பிரிட்டனிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறினார்.
பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்து மதத்தை பின்பற்றும் இவர் பிரிட்டனின் பிரதமராகி இருக்கிறார்.
பிரிட்டனில் இந்துக்கள் மிகச்சிறிய அளவில் இருக்கும் நிலையில் சிறுபான்மையினராக உள்ள ரிஷி சுனக்கை அந்நாட்டினர் பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் இருந்து இந்தியா பாடம் படிக்க வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கிளம்பிய விவாதம்
அதாவது இந்தியாவில் பெரும்பான்மை இல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களை அதிகாரமிக்க பதவிகளில் அமர செய்ய வேண்டும் எனவும், இது சாத்தியமா? என்பது பற்றிய விவாதங்கள் கிளம்பி உள்ளன. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய மாநிலங்களை எம்பியுமான ப சிதம்பரம், அமெரிக்காவில் கமலா ஹாரீஸ், பிரிட்டனில் ரிஷி சுனக் முக்கிய பதவிகளில் உள்ளனர். சிறுபான்மையினராக உள்ள இவர் முக்கிய பதவிகளில் உள்ளனர். இதில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என கூறியிருந்தார். அந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

இந்தியாவுக்கான பாடம்
பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகி உள்ளார். இது நல்ல விஷயம். வரவேற்கத்தக்கது. இதில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும். இந்தியாவில் இந்து, சீக்கியர், பவுத்தர் அல்லது ஜைனர் அல்லாத ஒருவர் பிரதமராக முடியுமா?. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பது வார்த்தை அளவில் மட்டும் தான் உள்ளது.

சம்பிரதாய பொறுப்பில்
இந்தியாவில் முஸ்லிம்கள் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். இருப்பினும் இது சம்பிரதாய பொறுப்பு தான். இதை கூறினால் காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாரே. அவர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் தானே என கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான இந்துக்கள் சீக்கியர்களை வித்தியாசப்படுத்தி பார்ப்பது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக மீது விமர்சனம்
தற்போது பெரும்பான்மைவாதிகள் என்ற அடிப்படையிலான அரசியல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக மிகவும் பின்தங்கி உள்ளது. பாஜகவில் இந்து, ஜெயின் அல்லது சீக்கியர் அல்லது பவுத்தர் அல்லாத ஒருவர் பிரதமராக வருவதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?. தற்போதைய சூழலில் பாஜகவுக்கு ஒரு முஸ்லிம் எம்பி கூட இல்லை. சோனியா காந்தி தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட பிரதமர் பதவிக்கு முயன்றபோது இத்தாலியை சேர்ந்தவர், அவர் பிறப்பால் கிறிஸ்தவர் என கூறினார்கள். இதையடுத்து தான் மன்மோகன் சிங் பிரதமரானார். மேலும் பாஜகவின் அப்போதைய மூத்த தலைவர் ஒருவர் (சுஸ்மா சுவராஜ் பெயரை குறிப்பிடாமல்) சோனியா காந்தி பிரதமரானால் மொட்டையடித்து கொள்வேன் என கூறினார்.

இனவெறியை கைவிட்ட பிரிட்டிஷ்காரர்கள்
பிரிட்டிஷ் இனவெறியை விமர்சிக்கும் நபராக நான் இருந்தேன். வெளிப்படையாக இனவெறி வரலாறு என்பது பிரிட்டிஷ்காரர்களுக்கு உண்டு. ஆனால் ஒரு இந்துவை தங்கள் நாட்டின் பிரதமராக தேர்வு செய்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்களின் மோசமான பண்புகளை கைவிட்டதாக எண்ணுகிறேன். ஏனென்றால் ஒரு காலத்தில் தரம்தாழ்ந்தவர்கள் என்று அவர்கள் கருதிய ஒரு இனத்தை சேர்ந்தவரை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக் இந்து மதத்தை வெளிப்படையாக பின்பற்றி வருகிறார். அவரது தேர்வை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

இனத்தை வைத்து தடுக்க கூடாது
அதோடு இத்தகைய தேர்வு என்பது நம்நாட்டில் உள்ள அரசியல் நிலை பற்றி சிந்திக்க வைக்கும் என நினைக்கிறேன். மேலும் ரிஷி சுனக்கின் வெற்றியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது என்னவென்றால் ஒருநபரின் இனத்தை வைத்து மட்டுமே தலைமை பண்புக்கு வருவதை தடுக்க கூடாது என்பது தான். மேலும் ரிஷி சுனக்கின் வயதும் முக்கியமான ஒன்றாக உள்ளது. 42 வயதில் பிரிட்டனின் இளம் பிரதமராக அவர் உள்ளார். இந்த விஷயத்தில் இந்தியாவில் பாஜக மட்டுமின்றி அனைத்து கட்சிகளையும் குற்றம்சாட்டுவேன். இந்தியாவில் வயது குறைந்தவர்கள் இத்தகைய பதவிக்கு வருவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்'' என்றார்.

42 வயதில் ரிஷி சுனக்
ரிஷி சுனக் 2014ல் முதல் முறையாக பிரிட்டனில் எம்பியானார். அதன்பிறகு அமைச்சரானார். கடந்த 2019 தேர்தலில் மீண்டும் எம்பியான இவர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக செயல்பட்டார். தற்போது 42 வயதிலேயே பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் சசிதரூர் 66 வயதை எட்டியுள்ளார். திருவனந்தபுரம் எம்பியாக உள்ள இவர் கடந்த 2009ல் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அப்போது அவருக்கு 53 வயது ஆகி இருந்தது. மேலும் தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டியிட்ட நிலையில் அவர் மூத்த தலைவரான 82 வயது நிரம்பிய மல்லிகார்ஜூன கார்கேவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications