ஹத்ராஸ்.. பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களின் போன்கள் பறிப்பு.. கழிவறைக்கு வெளியேயும் காவலுக்கு போலீஸ்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர் குடும்ப உறுப்பினர்கள் செல்போன்கள் போலீசாரால் பறிக்கப்பட்டுள்ளன.
உயர் சாதியை சேர்ந்த ஒரு கும்பலால், உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கடந்த மாதம் 14ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டார். கடும் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்ற அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பலியானார்.
ஆனால் அவர் உடலை குடும்பத்தாரிடம் கொடுக்காமல் போலீசார் தகனம் செய்தனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட பல்வேறு, அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
நாடு முழுக்க எழுந்த ஆக்ரோஷம்.. ஹத்ராஸ் மாவட்ட போலீஸ் எஸ்.பி. உட்பட 5 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
எஸ்பி சஸ்பெண்ட்
இந்த நிலையில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் அமைத்தஉயர் போலீஸ் அதிகாரிகளின் அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு ஹத்ராஸ் மாவட்ட போலீஸ் எஸ்பி விக்ராந்த் வீர் மற்றும் நான்கு போலீஸ் அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். எஸ்பி மற்றும் டிஎஸ்பியிடம் உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்படும் என்று உபி முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிராமத்திற்கே சீல்
பாதிக்கப்பட்டவரின் கிராமம் போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊடக நிருபர்கள் கிராமத்திற்குள் நுழைவதையும் குடும்பத்தினரை சந்திப்பதையும் தடுக்கின்றனர். பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் தொலைபேசிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சில பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வக்கீலையும் சந்திக்க விடவில்லை
2012 டிசம்பரில் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த 23 வயது நிர்பயாவின் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா இந்த வழக்கை கையில் எடுத்துள்ளார். சீமா குஷ்வாஹா கூறும் போது, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்னை ஹத்ராஸுக்கு அழைத்துள்ளனர், நான் அவர்களின் சட்ட ஆலோசகராக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என கூறினார். ஆனால், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களை அவர் சந்திக்க முடியாமல் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர்.
போன் பறிப்பு
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் என்று கூறும் ஒரு இளைஞன், ஊருக்கு வெளியே காத்திருக்கும் பத்திரிகையாளர்களை அணுகி, தங்கள் குடும்பம் முழுக்க போலீஸ் கண்காணிப்பில் இருப்பதாகவும், எங்கள் செல்போன்களையும் பிடுங்கி விட்டனர் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை அடித்ததாகவும் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கழிவறைக்கு வெளியே
தெருக்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதை தவிர, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டு கழிப்பறைகளுக்கு வெளியே கூட போலீசார் நிற்கிறார்களாம். "அந்த வீட்டின் பெண்கள் கழிவறைக்குச் செல்வதற்கு கூட சிரமமாக இருக்கிறது, சங்கோஜப்படுகிறார்கள். ஏனெனில் டாய்லெட் வெளியே காவல்துறையினர் நிற்கிறார்கள்," என்று அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நிருபர்களிடம் தெரிவித்தார். மருத்துவரைச் சந்திக்கப்போவதாக கூறிவிட்டு ஊரை விட்டு வெளியே வந்து இந்த தகவலை அந்த நபர் நிருபர்களிடம் கூறினார். இதுபோன்ற அராஜகங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.