திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா? டி.ராஜா மனு மீது திங்களன்று விசாரணை
டெல்லி: திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்த உள்ளது.
திருவாரூர் சட்டசபைக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதியில் தற்போது இடைத்தேர்தல் தேவை இல்லை என்று கோரிக்கை விடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மாரிமுத்து மற்றும் ரத்தினகுமார் ஆகிய 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
புனரமைப்பு பணிகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டு உள்ளதால், மக்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர். எனவே நிவாரணப் பணிகள் முடியும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இவர்கள் தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் இந்த மனுவை அவர்கள் தாக்கல் செய்தனர். அப்போது, அடுத்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணையை நடத்துவோம் என்று ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.
இந்த நிலையில், 3 மனுக்கள் மீதும், திங்கட்கிழமை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெறுமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்பது திங்கள்கிழமை தெரிய வரும்.