விவசாயிகளுக்கு மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பிஎம் கிஷான் யோஜனா.. வங்கி அக்கவுண்ட்டை செக் பண்ணுங்க
டெல்லி: நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், 16வது தவணையாக இரண்டாயிரம் ரூபாயை நேற்று விடுவித்தது. இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம் கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi) என்ற பெயரில் மத்திய அரசு, நாட்டில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் கிசான் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த தொகை ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட சிறந்த அரசு திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதையும், நாட்டில் அவர்களின் நலனை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏழை விவசாயிகளுக்கு வருமானம் அளிப்பதும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும், இது விவசாயிகளுக்கான சிறந்த திட்டம் என்றும் இதன் மூலம் அவர்கள் ஆண்டுக்கு ரூ.6000 உதவி பெறுகின்றனர் என்றும் மூன்று தவணையாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஒவ்வொரு தவணையாக ரூ.2000 வழங்கப்படுகிறது என்றும் மத்திய அரசு தனது அறிவிப்பில் கூறியுள்ளது. தவணைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மாற்றப்படுவதால், இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்து, விவசாய நிலையான நடைமுறைகளில் முதலீடு செய்ய உதவுகிறது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே விவசாயிகளுக்கான 16-வது தவணையை மத்திய அரசு நேற்று விடுவித்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மாலில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதை விடுவித்தார். இது 11 கோடிக்கு அதிகமான விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு செய்தி குறிப்பில் கூறியுள்ளது. இதில் கொரோனா காலத்தில் மட்டுமே ரூ.1.75 லட்சம் கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
பிஎம் கிசான் உதவி தொகை பெறுவது எப்படி: பிஎம் கிசான் உதவி தொகை பெற விவசாயிகளாக இருக்க வேண்டும். அந்த விவசாயிக்கு நிலம் அவரது பெயரில் இருக்க வேண்டும். அதேநேரம் பிஎம் கிசான் இணையதளத்தில் போய் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் நில ஆவணத்துடன், ஆதாரை இணைத்தால்தான் தவணைத்தொகையை மத்திய அரசு அவர்களது வங்கி கணக்கில் செலுத்தும். https://pmkisan.gov.in/. என்ற அதிகாரப்பூர்வமான இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications