உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
டெல்லி : உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்வதாகவும் கொரோனாவுக்கு எதிராக இந்திய நாடு வலிமையாக போராடுகிறது எனவும், கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் கவனத்துடன் தொடர்ந்து போராட வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
1947-ம் ஆண்டு விடுதலை அடைந்த நமது தேசம், 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ல் குடியரசு நாடாக மலர்ந்தது. இதனையே ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு நாளாக நாடு கொண்டாடி வருகிறது.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்
நமது நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாக உரையாற்றினார்.
குடியரசு தலைவர் உரை
அப்போது பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கொரோனாவுக்கு எதிராக இந்திய நாடு வலிமையாக போராடுகிறது எனவும், கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் கவனத்துடன் தொடர்ந்து போராட வேண்டும் என்றார். தொற்றின் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டம் குறைவாக இருந்தாலும் நமது உணர்வு எப்போதும் அதிக சக்தி உடையதாக இருக்கிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
தியாகிகள் நினைவு
சுயராஜ்யம் என்ற நாட்டு மக்கள் மக்கள் தங்கள் கனவை தொடர்வதற்காக ஒப்பிட முடியாத அளவிலான தைரியத்தினை வெளிப்படுத்தியதுடன், அதற்காக போராட மக்களையும் உத்வேகப்படுத்திய நம்முடைய மிக சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களையும் நாம் நினைவு கொள்ள வேண்டும் எனக் கூறிய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டவர்களையும் அவர்களது தியாகங்களையும் நினைவு கூர்ந்தார்.
உலக அளவில் பாராட்டு
இந்தியாவின் ஜனநாயகத்தின் பன்முக தன்மை மற்றும் துடிப்பு ஆகியவை உலக அளவில் பாராட்டை பெற்றுள்ளது எனக் கூறிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இதுவே ஒரு நாட்டின் ஒற்றுமையின் உணர்வாக இருந்து வருகிறது எனவும், ஆண்டுதோறும் குடியரசு தினத்தினை ஒவ்வோர் ஆண்டும் வழக்கான உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் கொண்டாடி வருவதற்கான காரணம் எனக் கூறினார்.
முன்னோடியாக இந்தியா
ஸ்டார்ட் அப் சூழலை மிகத் திறமையாக பயன்படுத்தி நாட்டில் உள்ள இளம் வயது சுய தொழில் முனைவோர் தொழில்துறையில் தங்களது முத்திரையை பதித்துள்ளனர் எனப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும், பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.