லதா மங்கேஷ்கர் மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ,முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்
டெல்லி/சென்னை: இந்திய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் (வயது 92) யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டு சென்றுள்ளதாக பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா பாதிப்பில் கடந்த ஒரு மாதமாக லதா மங்கேஷ்கர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய சினிமா துறையின் முகமாக திகழ்ந்தவர் லதா மங்கேஷ்கர்.

2 நாட்கள் துக்க தினம்
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலை லதா மங்கேஷ்கர் காலமானார். இசைப்பயணத்தை நிறுத்திவிட்ட இசைக்குயில் மறைவு லதா மங்கேஷ்கரின் ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லதா மங்கேஷ்கரின் இறுதி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெறும். அவரது மறைவை முன்னிட்டு மத்திய அரசு 2 நாள் துக்க தினமாக கடைபிடிக்கப்படும்; தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
லதா மங்கேஷர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் சாதனைகள் யாரோடும் ஒப்பிடமுடியாதவில்லை என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். பிரதமர் மோடி தமது ட்விட்டர் பதிவில், லதா மங்கேஷ்கர் திரைத்துறைக்கு அப்பால் தேசத்தின் மீதும் பற்று கொன்டிருந்தார். வலிமையான பாரதத்தை காண விரும்பியவர் லதா தீதி. அவரிடமிருந்து ஏராளமான அன்பைப் பெற்றிருக்கிறேன். அடுத்தடுத்த தலைமுறைகளால் எப்போதும் நினைவு கொள்ளத்தக்கவராக லதா மங்கேஷ்கர் திகழ்வார். யாராலும் நிரப்பவே முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார் லதா மங்கேஷ்கர் என பதிவிட்டுள்ளார்.

ராகுல் இரங்கல்
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் செல்லக்குரலாக திகழ்ந்தவர். லதா மங்கேஷ்கரின் தங்க குரலுக்கு அழிவேதும் இல்லை. ரசிகர்களின் மனதில் எப்போதும் லதா மங்கேஷ்கரின் குரல் எதிரொலித்து கொண்டே இருக்கும் என்றார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கத்தில், இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைகிறேன். எண்பதாண்டுகாலம் பரந்து விரிந்ததான அவரது இசை வாழ்வில் தனது தேனையொத்த குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் அவர் வருடிச் சென்றுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications