ஒரே ஒரு போட்டோ தான்! சிலிண்டர் விலை உயர்வை விளக்கிய சசிதரூர்!மத்திய அரசை விமர்சிக்கும் பொதுமக்கள்
டெல்லி: இந்தியாவில் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வால் ஏழைகள் படும் சிரமத்தை ஒரே ஒரு போட்டோ மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் விளக்கி உள்ளார். இதையடுத்து பொதுமக்கள் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சசிதரூர். கேரளாவை சேர்ந்த இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.
இவர் தனது காங்கிரஸ் கட்சி உள்பட மத்திய அரசு, உலக அரசியல் தொடர்பான அனைத்து கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் சசிதரூர் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு.

போட்டோ வெளியீடு
இந்நிலையில் தான் இந்தியாவின் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது வீட்டு உபயோகத்துக்கான ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,018 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர் விலை உயர்வை விளக்கும் வகையில் சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போட்டோ சொல்வது என்ன?
அதில், சமையலறையில் எரிவாயு சிலிண்டர் கியாஸ் அடுப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பெண் ஒருவர் விறகு அடுப்பை பயன்படுத்துகிறார். அதாவது தொடர்ந்து உயர்ந்து வரும் சிலிண்டர் விலையால் ஏழை மக்கள் அதனை வாங்கி பயன்படுத்த முடியாது. ஏழைகளின் வீட்டில் சிலிண்டர், கியாஸ் அடுப்பு என்பது வெறும் காட்சிப்பொருளாக தான் மாறியுள்ளது என்பதை சசிதரூர் விளக்கியுள்ளார். மேலும் இந்த பதிவில், இதுபற்றி என்ன சொல்ல? எனவும் அவர் கேள்வி கேட்டுள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் மத்திய அரசை விமர்சனம் செய்ய துவங்கியுள்ளனர்.

மல்லிகார்ஜூன் கார்கே விமர்சனம்
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன் கார்கேவும் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 10 மாதத்தில் மட்டும் ரூ.200 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது. மோடி அரசு ஏழைகளை வதைக்கும். மத்திய அரசு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசாக செயல்படவில்லை என தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் விலை எவ்வளவு?
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. மே 7 ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதையடுத்து நேற்று ரூ.3 விலை அதிகரிக்கப்பட்டது. இதனால் தற்போது ஒரு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1,018 ஆக உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும் ஏழை மக்களும் சிலிண்டர் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications