டெல்லியில் குறைந்த காற்று மாசு.. மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்.. முடிவுக்கு வந்த தொடர் விடுமுறை!
டெல்லி: டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதன் காரணமாக இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வந்தது. குறிப்பாக கடந்த வியாழக்கிமை முதல் காற்றின் தரக்குறியீடு 450 வரை எட்டி, சுவாசிக்க தகுதியற்றவை என்ற நிலையை அடைந்தது. காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
உச்சத்தில் காற்று மாசு.. டெல்லியில் மூச்சு விட முடியல.. கெஜ்ரிவால் போட்ட அதிரடி உத்தரவு.. என்ன அது?
டெல்லி அரசு உத்தரவு
அதே போல் 5ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு, பள்ளிக்கு வெளியே சென்று படித்தல் விளையாடுதல் போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் காற்று மாசுவை குறைக்க 50 சதவிகிதம் அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என டெல்லி அரசு அறிவித்தது. இதேபோல் தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
காற்று மாசால் பள்ளிகள் மூடல்
இதுமட்டுமல்லாமல் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகள் திறப்பு பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் வீட்டிலேயே இருக்க அறிவுரை வழங்கப்பட்டு வந்தது. நொய்டா பகுதிகளில் 8ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஏற்பாட்டை வரும் நவம்பர் 8ஆம் தேதி வரை பின்பற்ற வேண்டும் என்றும், அதன்பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
பள்ளிகள் திறப்பு
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதன் விளைவாக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாக வீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில், இன்று மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் அரசு ஊழியர்களுகளும் மீண்டும் அலுவலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்று மாசுக்கு காரணம் என்ன?
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசிற்கு அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும், டெல்லியில் தனியார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பும் காற்றின் மாசு அதிகரிப்புக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன எண் அடிப்படையில் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்தும் டெல்லி அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.