குட் நியூஸ்.. ரூ.16,000 கோடி.. விவசாயிகளுக்காக விடுவித்தார் பிரதமர் மோடி.. 12வது தவணை
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் இன்று 'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
அதேபோல பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 12வது தவணையாக ரூ.16,000 கோடி நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய திட்டங்களை பிரதமர் அறிவித்து வருகிறார்.

சம்ரிதி மையம்
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சிறிது காலமே உள்ள நிலையில் பாஜக இந்த தேர்தலை எதிர்கொள்ள தன்னை தயார்ப்படுத்தி வருகிறது. மட்டுமல்லாது இந்த ஆண்டு நடைபெற உள்ள இமாச்சாலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேல்தலில் பெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில் இன்று விவசாயிகளுக்கு சில திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக 'பிரதம மந்திரி கிசான் சம்மன் சம்மேளனம் 2022' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் மூலம் சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்களாக மாற்றியமைக்கப்பட உள்ளன.

விதைகள்
இந்த மையங்கள் விவசாயிகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த மையங்களில் உரம், விதைகள் கிடைக்கும். இங்கு உரத்தை பரிசோதனை செய்துகொள்ளும் வசதியும் இருக்கும். அதேபோல பூச்சிகள் தாக்குதலிருந்து பயிரை எப்படி பாதுகாப்பது என்பது போன்ற விழிப்புணர்வும், மத்திய அரசின் திட்டங்களும் இந்த மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கப்படும். இத்திட்டத்தின்படி சுமார் 3.3 லட்சம் சில்லறை உர விற்பனையகங்கள் சம்ரிதி மையங்களாக மாற்றப்பட உள்ளன.

ஒரே உரம்
அதேபோல 'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் "பாரத்" என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு உதவியாக பாரத் யூரியா பைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும். இந்த திட்டங்களை தொடங்கி வைத்து விவசாயிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பிரதமர் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 13,500 விவசாயிகளும், 1500 வேளாண் புத்தொழில் நிறுவனத்தினரும் பங்கேற்றுள்ளனர்.

பிஎம் கிசான் திட்டம்
பிரதமர் தனது உரையில், "பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 12வது தவணையாக ரூ.16,000 கோடி நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். மேலும், "உரங்களின் தரம் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பத்தில் மிக பெரிய உருமாற்றம் நடந்துள்ளது. இதனால், வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இது இந்தியாவை உலக அளவில் வேளாண் பொருட்களின் உற்பத்தி மையமாக மாற்றும்" என்றும் கூறியுள்ளார். இறுதியாக இந்த நிகழ்ச்சியில் 'இந்தியன் எட்ஜ்' என்ற உரம் சம்பந்தமான மின்னணு இதழையும் (e-magazine) வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்புகளை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications