ரபேல் ஒப்பந்த சர்ச்சை...ஊழல் குற்றச்சாட்டுக்கு டெப்சிஸ் சொலிசஷன் நிறுவனம் மறுப்பு - ஆதாரங்கள் ரிலீஸ்
ரபேல் விமானம் ஒப்பந்தம் தொடர்பான ஊழல் புகாரில் சிக்கி உள்ள இந்திய நிறுவனம் முறைகேடுகளை மறுத்து ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.
டெல்லி: இந்திய பாதுகாப்பு நிறுவனமான டெப்சிஸ் சொல்யூஷன்ஸ், ரபேல் ஜெட் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. உண்மையை நிரூபிக்கும் ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான ஆர்டருடன் தொடர்புடைய டெலிவலி சலான்கள், ஈவே பில்கள், ஜிஎஸ்டி, வருமானங்களின் நகல்ளையும் டெப்சிஸ் சொலிசஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் வகையில் புதிய அதிநவீன போர் விமானமான பிரான்சின் ரபேல் போர் விமானம் வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என்ற வீதத்தில் 126 விமானங்கள் வாங்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமரானதும் அவர் கடந்த 2016ல் பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணம் செய்தார். அப்போது, ரபேல் விமானம் வாங்குவதில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி ஒரு விமானம் ரூ.1670 கோடி என்ற விலையில் 36 விமானங்கள் வாங்க ரூ.59,000 கோடிக்கு பிரதமர் மோடி ஒப்பந்தத்தை முடிவு செய்தார். இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
விமானத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் கடந்த 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பெருமளவில் எதிரொலித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு முடிவுகள் மத்திய அரசுக்கு சாதகமாக அமைந்தன.
அனைவருக்கும் தடுப்பூசி எப்போது?.. எல்லோருக்கும் இப்போதைக்கு வாய்ப்பில்லை.. சுகாதாரத் துறை
இந்நிலையில், ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக புதிய குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது. ரபேல் ஒப்பந்தம் கடந்த 2016ல் உறுதியானதும் 2018 அக்டோபரில் டசால்ட் நிறுவனம் இந்தியாவில் துணை ஒப்பந்த நிறுவனமான டெப்சிஸ் சொலிசஷன் என்ற நிறுவனத்திற்கு ரூ.8.6 கோடி கமிஷனாக கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தை பிரான்ஸ் ஊழல் தடுப்பு துறை கண்டுபிடித்திருப்பதாக அந்நாட்டின் ஆன்லைன் பத்திரிகையான மீடியா பார்டு தெரிவித்துள்ளது.
பிரான்சின் பெரிய நிறுவனங்களின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை அந்நாட்டின் ஊழல் தடுப்பு துறை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, கடந்த 2017 மற்றும் 2018ல் டசால்ட் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளில் பல்வேறு குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விஷயத்தை ஆய்வு செய்த போதுதான், ரபேல் ஒப்பந்தம் முடிவானதும் டசால்ட் நிறுவனம் இந்திய இடைத்தரகு நிறுவனமாக செயல்பட்ட டெப்சிஸ் நிறுவனத்திற்கு ரூ.8.6 கோடி கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டசால்ட் நிறுவனம் அளித்த விளக்கத்தில், ரபேல் விமானத்தின் மாதிரிகளை செய்து தருவதற்காக ரூ.8.6 கோடி டெப்சிஸ் நிறுவனத்திற்கு தரப்பட்டது என கூறியது. ஆனால், அதுபோன்ற எந்த மாதிரி புகைப்படங்களையும் டசால்ட் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை. எனவே இது இடைத்தரகு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக தரப்பட்ட பணம் என்பது உறுதியாகி உள்ளது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் மீண்டும் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள ராகுல்காந்தி, கர்மா என்பது ஒருவரது செய்கைகளின் தொகுப்பு; அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
Karma = The ledger of one's actions.
— Rahul Gandhi (@RahulGandhi) April 6, 2021
Nobody escapes it.#Rafale
இது குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. உச்ச நீதிமன்றம், மத்திய கணக்கு தணிக்கை ஆய்வில் எந்த தவறும் நடக்கவில்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டெப்சிஸ் சொலிசஷன் நிறுவனம், ஊடக அறிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் தவறான கூற்றுக்கள் என்று கூறியுள்ளது. இந்திய நிறுவனம் 50 ரபேல் போர் விமானங்களை வழங்கும் ஒப்பந்தத்தை உண்மையில் பெற்று முடித்ததாகக் கூறியது.
எங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவரான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து பெறப்பட்ட கொள்முதல் ஆணையின் அடிப்படையில், நாங்கள் ரபேல் விமானத்தின் 50, 1:10 பிரதி மாதிரிகள் ஒப்பந்தத்தை டசால்ட் ஏவியேஷனுக்கு வழங்கினோம் என்று டெப்சிஸ் சொலிசஷன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கான ஆர்டருடன் தொடர்புடைய டெலிவலி சலான்கள், ஈவே பில்கள், ஜிஎஸ்டி, வருமானங்களின் நகல்ளையும் டெப்சிஸ் சொலிசஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.