இவர்.. இவருக்காக மட்டும்தான் மோடி மொத்த ரபேல் ஒப்பந்தத்தையும் செய்தார்.. ராகுல் பகீர் பேட்டி!
டெல்லி: மொத்த ரபேல் ஒப்பந்தமும் அனில் அம்பானியின் நலனுக்காக மட்டும்தான் பாஜக அரசால் செய்யப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்பு அதிகாரிகளின் கடிதங்கள் இன்று காலை வெளியானது. இதில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாஜக அரசின் ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர்.
இதை தொடர்ந்து ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அரசுக்கு ஆதரவாக இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ராகுல் பேட்டி
இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கடிதங்களை ராகுல்காந்தி வெளியிட்டு பேசினார். ரபேல் ஒப்பந்தம் சரியாக செய்யப்படவில்லை என்று ரபேல் ஒப்பந்த குழுவில் இருந்து அதிகாரிகள், அந்த குழுவின் தலைவருக்கு எழுதிய கடிதத்தை ராகுல் காந்தி வெளியிட்டு பேசினார்.

இரண்டு காரணம்
ராகுல் தனது பேட்டியில், காங்கிரஸ் அரசு செய்த இந்த ரபேல் ஒப்பந்தத்தை பாஜகவினர் ஏன் மீண்டும் செய்தார்கள் தெரியுமா, இரண்டு காரணங்கள்தான். ஒன்று, விலை. இன்னொன்று, உடனடி டெலிவரி. ஆனால் இது இரண்டும் பாஜக செய்த ஒப்பந்தம் மூலம் நடக்கவில்லை. காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை விட மிக தாமதமாகத்தான் ரபேல் விமானம் பாஜக செய்த ஒப்பந்தம் மூலம் கிடைக்கும்.

ஆனால் நடக்காது
பாஜக ஒப்பந்தம் மூலம் 10 வருடம் கழித்துதான் இந்தியாவிற்கு விமானம் கிடைக்கும். பிரான்ஸ் அரசு கொடுத்த இறுதி விலையை பாருங்கள். 55% விலையை பிரான்ஸ் ஏற்றி இருக்கிறது. அதேபோல் நாட்கள் செல்ல செல்ல இந்த விலையை ஏற்றுவோம் என்றும் கூட இதில் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

ஒரு காரணம்தான்
இப்போது சொல்கிறேன் இந்த ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது என்று. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு இரண்டு காரணம் இல்லை, ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு கொடுக்க விரும்பினார். அதனால் நாங்கள் போட்ட ஒப்பந்தத்தை மாற்றிவிட்டு புதிய ஒப்பந்தத்தை போட்டு இருக்கிறார்கள்.

அம்பானி மட்டும்தான்
ரபேல் மூலம் அனில் அம்பானி மட்டும்தான் பலன் அடைந்து இருக்கிறார். பிரதமர் மோடிதான் அனில் அம்பானிக்கு பணத்தை கொடுத்துள்ளார். அனில் அம்பானிக்காக மட்டுமே ரஃபேல் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் பாஜக உண்மைகளை மறைத்துவிட்டது.

தீர்ப்பு
முக்கிய ஆவணங்களை பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழங்கவில்லை. நான் தேசிய பாதுகாப்பு குறித்து இங்கு பேசுகிறேன். நான் இங்கே வைத்திருக்கும் கடிதங்களை ஏன் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. இதில் இருந்து தெரிகிறது பாஜக, மிக, மிக மோசமாக ஏமாற்றி இருக்கிறது என்று.

பொய்
இதன் மூலம் பாஜக பொய் சொல்கிறது என்று புரிகிறது. இதன் மூலம் நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் எல்லோரும் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னது தெளிவாகிறது சிஏஜி அறிக்கையில் பல முக்கிய விவரங்கள் எதுவும் இல்லை - ராகுல் காந்தி சிஏஜி அறிக்கை வெற்று காகிதம் போல உள்ளது, என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!