ராஜீவ் காந்தி நினைவு தினம்.. அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி.. டுவிட்டரில் பிரியங்கா உருக்கம்
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 30வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியிலுள்ள தனது தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
1991ம் ஆண்டு, மே 21ம் தேதி, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றபோது அப்போதைய பிரதமரான ராஜிவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலால் கொல்லப்பட்டார்.

பாரத ரத்னா பெற்றவரான ராஜீவ் காந்தி நாட்டின் ஆறாவது பிரதமராக பதவி வகித்தவர். ராஜீவ் காந்தியின் தாயார் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டில் பிரதமராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு 40 வயது என்பதால் இந்தியாவின் இளம் பிரதமர் என்ற பெருமையை ராஜீவ் காந்தி பெற்றார். தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா அடைந்த வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டது ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியின் 30வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டுவிட்டரில் ராஜிவ் காந்தியை நினைவுகூர்ந்து பதிவுகளை ஷேர் செய்து வருகிறார்கள்.

ராகுல் காந்தி மற்றும் அவர் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் தங்களது டுவிட்டர் பதிவுகளில், தங்கள் தந்தையை நினைவு கூர்ந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில், ராகுல் காந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த ஆண்டு, கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக "சேவா மற்றும் சத்பவ்னா" நாளாக ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில கட்சி கிளைக்கும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications