"டிரம்பை பார்த்தாலே மோடிக்கு பயம்!" அடுத்து ராகுல் போட்ட லிஸ்ட்! சப்போர்ட்டிற்கு வந்த முக்கிய புள்ளி
டெல்லி: ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்தாக அதிபர் டிரம்ப் இன்று காலை அறிவித்தார். இது அரசியல் அரங்கில் முக்கியமானதாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள ராகுல் காந்தி, மிகக் கடுமையாகப் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். வரம்பிற்குப் பிரதமர் மோடி பயந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லி இந்தியாவுக்கு வரிகளை அறிவித்தார். இதற்கிடையே இன்று காலை திடீரென ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளதாகச் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பினார் டிரம்ப்!

ராகுல் சாடல்
இந்த விவகாரத்தில் தான் பிரதமர் மோடியை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கண்டு, பிரதமர் நரேந்திர மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்று முடிவெடுக்கவும் அதை அறிவிக்கவும் டிரம்ப்பை பிரதமர் மோடி அனுமதித்ததாக அவர் சாடியுள்ளார். இப்படி பலமுறை டிரம்ப் அவமதித்தாலும் மோடி அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்புவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் போட்ட லிஸ்ட்
இது தொடர்பாக ராகுல் காந்தி மேலும், "டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி அஞ்சுகிறார். 1) ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்று டிரம்ப் அறிவிப்பதை மோடி அனுமதிக்கிறார். 2) பலமுறை அவமதித்தாலும், பிரதமர் மோடி தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்புகிறார். 3) நமது நிதி அமைச்சரின் அமெரிக்கப் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 4) (டிரம்ப் தலைமையில்) காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது அங்குச் செல்வதைத் தவிர்த்தார்.. 5) ஆபரேஷன் சிந்துர் விஷயத்தில் அவரை எதிர்க்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். ஒரு தரப்பினர் ராகுல் காந்தி கேள்வியில் நியாயம் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். அதேநேரம் இன்னொரு தரப்பினர் பிரதமரை இதுபோல பேசுவது சரியில்லை எனச் சாடி வருகிறார்கள்.
முக்கிய புள்ளி
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "2025 மே 10ம தேதி மாலை 5:37 மணிக்கு, ஆபரேஷன் சிந்துரை இந்தியா நிறுத்திவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோதான் முதலில் அறிவித்தார். அதன் பிறகு 5 நாடுகளில் இருந்தபடி இந்தியா பாகிஸ்தான் மோதலை.. வரி மூலம் நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் சொல்லிவிட்டார். ஆனாலும் நமது பிரதமர் மவுனம் காக்கிறார்..
இப்போது அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யாது என்று மோடி தனக்கு உறுதியளித்துள்ளதாகக் கூறியுள்ளார். மோடி அரசு முக்கிய முடிவுகளை அமெரிக்காவிடம் அவுட்சோர்ஸ் செய்துள்ளதாகத் தெரிகிறது. 56 இன்ச் மார்பு என்னவானது" என்று விமர்சித்துள்ளார்.
டிரம்ப் சொன்னது என்ன
முன்னதாக இன்று காலை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "மோடி எனது நண்பர், எங்களுக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது.. ரஷ்யாவிடம் இருந்து அவர் எண்ணெய் வாங்குவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை, ஏனெனில் அதுதான் ரஷ்யாவைப் போரைத் தொடர அனுமதித்தது.. இது தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். இன்று ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். இது ரொம்ப முக்கியம். அடுத்து நாம் சீனாவையும் இதையே செய்ய வைக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications