'ட்விஸ்ட்' டெல்லி திரும்பும் ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல்?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி டெல்லிக்கு பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் செப்.24ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3 நாள்.. 75 கி.மீ நடைபயணம் தொடங்கும் தமிழக காங்கிரஸ்! அரசியல் சாசனம் காக்க.. கேஎஸ் அழகிரி அறிவிப்பு!
சீனியர்கள் போட்டி
அக்.17ம் தேதி பதிவாகும் வாக்குகள் அக்.19ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட ஆர்வம் காட்டாத நிலையில், பிற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருகின்றனர்.
அசோக் கெலாட் தீவிரம்
குறிப்பாக சசி தரூர், அசோக் கெலாட், மணீஷ் திவாரி, திக் விஜய் சிங் உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதில் ஏற்கனவே சசி தரூர் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் சோனியா காந்தியை சந்தித்து உள்ள நிலையில், திக் விஜய் சிங் டெல்லிக்கு வந்துள்ளார்.
இந்திய ஒற்றுமை பயணம்
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் 15வது நாளாக கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த நடைபயணம் வரும் 29ம் தேதி கர்நாடகாவில் தொடங்க உள்ளது. இதனால் ஒற்றுமை யாத்திரையை ஒத்திவைத்துவிட்டு ராகுல் காந்தி டெல்லி வர மாட்டார் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டன.
டெல்லி செல்லும் ராகுல் காந்தி
இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக ராகுல் காந்தி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட மனுதாக்கல் செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தேர்தல் போட்டி?
இதனால் இந்திய ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெறும் என்றும், செப்.24ம் தேதி ராகுல் காந்தி மீண்டும் நடைபயணத்தில் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தனை நாட்களாக காங்கிரஸ் தலைவர் பதவியை வேண்டாம் என்று கூறி வந்த ராகுல் காந்தி, திடீரென மனுதாக்கல் செய்ய டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது சீனியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.