இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க வலியுறுத்துங்கள்! ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
டெல்லி: இலங்கை அதிபர் அனுரகுமார தியசநாயக டெல்லி வந்திருக்கிறார். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க அவரிடம் வலியுறுத்துங்கள் என்று கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்கள் கைது: மீன்பிடி தொழிலில் கடும் பாதிப்புகளை எதிர்கொள்வது ராமேஸ்வரம் மீனவர்கள்தான். ஒவ்வொரு நாளும் சுமார் 300 விசை படகுகள் வரை மீன்வளத் துறையின் அனுமதி பெற்று கடலுக்கு செல்கின்றன. ஆனால், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து அழைத்து செல்கின்றனர். கடந்த 5ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

சவால்: அதற்கு முன்னர், அதாவது டிச.3ம் தேதி காங்கேசன் கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படியாக இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி இந்த நாள் வரை ஏறத்தாழ 500 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நம்மை விட அளவிலும், பலத்திலும் சிறிய நாடாக இருக்கும் இலங்கை, அதன் கடற்படை பலத்தை கொண்டு மீனவர்களை கைது செய்கிறது.
ஆனால் இதை மத்திய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும், இந்திய இறையான்மைக்கு விடுக்கப்பட்ட சவால் இது என்றும் அரசியல் தலைவர்கள் விமர்சித்திருந்தனர்.
இந்தியா வந்த இலங்கை அதிபர்: இந்த நிலையில்தான் இலங்கையின் புதிய அதிபர் இந்தியாவுக்கு மூன்று நாட்கள் பயணமாக வந்திருக்கிறார். நேற்று டெல்லி வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. அவருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசின் முக்கிய அமைச்சர்களை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடிதம்: இப்படி இருக்கையில், இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்னை குறித்து வலியுறுத்த வேண்டும் என்று ஜெய்சங்கருக்கு, ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் "இலங்கையில் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும், மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை ரத்து செய்யவும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்" என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருந்து வந்தது.
முதல்வர் எழுதிய கடிதம்: ஏற்கெனவே மீனவர்கள் கைது விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், "மீனவர்கள் கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதுபோன்று நம் நாட்டு மீளர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 123 மீனவர்களையும். 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரியிருந்தார்.
தொடர் கோரிக்கைகளையடுத்து, அதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இன்று ராகுல் காந்தி கடிதம் எழுதியிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications