12 ராஜ்யசபா எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து இல்லை- வெங்கையா நாயுடு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: 12 எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். முன்னதாக லோக்சபாவில் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரி கட்சிகளின் எம்.பிக்கள் 12 பேர் நேற்று நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

டெல்லியில் ஆலோசனை
இதற்கு 14 எதிர்க்கட்சிகள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இன்று காலையில் டெல்லியில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். இக்கூட்டத்தில் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

லோக்சபாவில் அமளி- ஒத்திவைப்பு
இதனிடையே இன்று காலை 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் தொடங்கின. லோக்சபாவில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதர எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அவர்களை சபாநாயகர் ஓம்பிர்லா அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் அமளி தொடரவே சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

வெங்கையா நாயுடு மறுப்பு
ராஜ்யசபாவில் பேசிய சபை தலைவர் வெங்கையா நாயுடு, மழைக்கால கூட்டத் தொடரில் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டது வருத்தம் தரக் கூடியது என வேதனையை வெளிப்படுத்தினார். அப்போது பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இது தொடர்பாக வெங்கையா நாயுடுவை அவரது அறையில் சந்தித்து பேச இருக்கிறோம் என கூறினார். ஆனால் வெங்கையா நாயுடுவோ, 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்ய முடிவில் எந்த மாற்றமும் இல்லை; சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

ராஜ்யசபாவில் வெளிநடப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் இருந்தும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். இதனால் ராஜ்யசபாவிலும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் 2-வது நாளிலும் இரு சபைகளிலும் அமளி தொடருகிறது.












Click it and Unblock the Notifications