ஜம்மு காஷ்மீரை பிரிப்பதற்கான மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேறியது.. 125 பேர் ஆதரவு.. 61 பேர் எதிர்ப்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீரை பிரிப்பதற்கான மசோதா ராஜ்ய சபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் தனியாக உருவாக்கப்படுகிறது.
இன்று காலை ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த அதிரடியாக மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாகி பிரிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.
காலையில் விவாதம்
இந்த நிலையில் இதன் மீதான விவாதம் காலையில் நடந்தது. திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதிமுக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தது.
வைகோ
முக்கியமாக இந்த மசோதாவிற்கு எதிராக மதிமுக எம்பி வைகோ பேசியது பெரிய வைரலானது. நாடு முழுக்க வைகோவின் பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்தது. காஷ்மீரில் பாஜக மிகப்பெரிய அரசியல் படுகொலையை, ஜனநாயக படுகொலையை செய்துள்ளது என்று அவர் விமர்சனம் செய்தார்.
பதில் அளித்தார்
இதையடுத்து இந்த விவாதங்களு அமித் ஷா இன்று மாலை பதில் அளித்து பேசினார் . அதில், ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி இல்லாமல் போனதற்கு காரணமே 370-வது பிரிவுதான். எந்த மதத்தையும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீடிப்பதால்தான் தீவிரவாதம் தொடருகிறது. ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை.370-வது பிரிவு பாதகங்களை செய்துவிட்டது, என்று குறிப்பிட்டார்.
என்ன வாக்கெடுப்பு
இதையடுத்து மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. முதலில் குரல் வாக்கெடுப்பு நடந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதை சரியாக பதிவு செய்ய முடியவில்லை. அதன்பின் மீண்டும் வாக்கு சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடந்தது.
என்ன எதிர்ப்பு
வாக்கெடுப்பில் திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதிமுக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ஜம்மு காஷ்மீரை பிரிப்பதற்கான மசோதா ராஜ்ய சபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது.
வெற்றி
ராஜ்ய சபா வாக்கெடுப்பில் ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 61 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் தனியாக உருவாக்கப்படுகிறது.இதன் மூலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் இருக்கும். அதேபோல் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும்.