கோரிக்கை ஏற்கும்வரை வீடு கிடையாது... விவசாயிகள் பயிர்களை தியாகம் செய்ய தயாராகுங்கள் -ராகேஷ் திகைத்
டெல்லி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் வீடு திரும்பப் போவதில்லை. தேவைப்பட்டால் பயிரை தியாகம் செய்ய விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறினார்.
மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் விவசாயிகள் மகா பஞ்சாயத்துகளை நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.
ராகேஷ் திகைத் தெம்பூட்டினார்
இதற்கிடையே குடியரசு தினம் அன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. அதன்பிறகு சில விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன. குடியரசு தின சம்பவத்துக்கு பிறகு சிறிது சோர்ந்து இருந்த விவசாயிகளுக்கு பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் தெம்பூட்டினார்.
பேச்சுவார்த்தைக்கு தயார்
டெல்லி திகிரி எல்லையில் விவசாயிகளை திரட்டி அவர் நடத்திய போராட்டம், மறுபடியும் விவசாயிகள் போராட்டத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், பயிர்களை அறுவடை செய்வதற்காக விவசாயிகள் போராட்டத்தை விட்டுவிட்டு கிராமங்களுக்குத் திரும்புவார்கள் என்று மத்திய அரசு கூறியது.
பயிர்கள் தியாகம் செய்யுங்கள்
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராகேஷ் திகைத் ஹரியானாவின் ஹிசாரில் உள்ள காரக் பூனியா கிராமத்தில் நடந்த மகாபஞ்சாயத்தில் அவர் பேசியதாவது:- பயிர்களை(கோதுமை) அறுவடை செய்வதற்காக விவசாயிகள் கிராமங்களுக்குத் திரும்புவார்கள் என்று அரசு கூறுகிறது. பண்ணைச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் வீடு திரும்பப் போவதில்லை. தேவைப்பட்டால் நீங்கள்(விவசாயிகள்) பயிரை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். உங்கள் பயிரை தீ வைக்க தயாராகுங்கள்.
தமிழ்நாட்டிலும் மகா பஞ்சாயத்து
உங்கள் டிராக்டர்களை எரிபொருள் நிரப்பி டெல்லியை நோக்கி எதிர்கொண்டு இருங்கள். உங்களுக்கு எந்த நேரத்திலும் டெல்லிக்கு செல்ல அழைப்பு வரலாம். இது தொடர்பாக விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்யும். மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் விவசாயிகள் மகா பஞ்சாயத்துகளை நடத்துவார்கள் என்று ராகேஷ் திகைத் கூறினார்.