மீண்டும் டாக்டர்களை வம்பிழுத்த பாபா ராம்தேவ்.. இந்த முறை அமீர்கானின் பழைய வீடியோவை போட்டு சவால்!
டெல்லி: அலோபதி மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவர்கள் குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் ஏற்பட்டுள்ள சலசலப்பு ஓயாத நிலையில், நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ் ஜெயதே' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பழைய வீடியோவைப் பகிர்ந்து கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அந்த வீடியோவில் அமீர்கானின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர் சமித் சர்மா என்ற விருந்தினர் மருந்து பொருட்களின் விலை உயர்வை பற்றியும் சந்தைகளில் கிடைக்கும் மருந்துகளின் விலை நிலவரம் பற்றி பேசியிருந்தார்.
2012 இல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட 'சத்யமேவ் ஜெயதே' நிகழ்ச்சியின் ஒர எபிசோடில் இருந்து கிளிப்பை ட்விட்டரில் பகிர்ந்த யோகா குரு ராம்தேவ், "மருத்துவ மாஃபியாக்களே நாட்டில் நவீன மருந்துகளின் "அதிக விலை" பற்றி விவாதித்ததற்காக நடிகர் அமீர்கானுக்கு எதிராக வழக்குத் தொடர முடியுமா? எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா?" என்று கேட்டு சவால் விடுத்துள்ளார்.
அமீன்கான் ஆச்சர்யம்
குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர் சர்மா "மருந்துகளின் அசல் விலை மிகவும் குறைவு. ஆனால் அவற்றை சந்தையில் இருந்து வாங்கும்போது, அந்த மருந்துகளுக்கு 10 முதல் 50% கூடுதல் கட்டணம் செலுத்துகிறோம். மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்தியாவில், 40 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு கூட கொடுக்கத் தவறிவிடுகிறார்கள். இதற்கிடையில், அதிக விலைக்கு வாங்கிய மருந்துகளை அவர்களால் வாங்கமுடியுமா?" என்று கேள்ளி எழுப்பினார். அப்போது அமீர்கான் குறுக்கிட்டு அதிர்ச்சியுடன் "இந்த காரணத்தால் (அதிக விலை) தான் பலர் மருந்துகளை வாங்க முடியாமல் போனதா? என்று கேட்டார்
சீண்டிய ராம்தேவ்
விருந்தினர் டாக்டர் சர்மா அதற்கு தலையசைத்து, "ஆம். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதத்தினர் அதிக விலை நிர்ணயம் செய்வதால் அத்தியாவசிய மருந்துகளை தொடர்ந்து பெறுவதில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது" என்றார். அதற்கு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய அவர், "ஒரு பாக்கெட் ரத்த புற்றுநோய் மருந்து வழக்கமாக ரூ .1.25 லட்சம் செலவாகும். அதே பொதுவான மருந்துகளை சுமார் 10,000 ரூபாயில் வாங்கலாம் என்றார். இந்த வீடியோவை காட்டி தான் பாபா ராம் தேவ் மீண்டும் டாக்டர்களை சீண்டியுள்ளார்.
தடுப்பூசியால் மரணம்
சமீபத்தில் பாபா ராம்தேவ் பேசிய வீடியோவில், " அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்" என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். இந்த விவகாரத்தை இந்திய மருத்துவக் கூட்டமைப்பு பிரதமர் மோடியின் பார்வைக்கு எடுத்துச் சென்றது. தடுப்பூசி குறித்து தவறான பிரச்சாரத்தை செய்துவரும் பாபா ராம்தேவ் மீது உடனடியாக தேசவிரோதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தி கடிதம் எழுதியது.
ராம் தேவ் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்த பாபா ராம்தேவ் " என்னை கைது செய்ய வேண்டும் என்று பேசுபவர்கள் எல்லாம் வெறு வாய்ப்பேச்சுதான், சத்தம்தான் போடமுடியும். என்னைப் பற்றி பலவாறு அவதூறு பரப்பலாம், ஹேஷ்டேக் உருவாக்கி பிரச்சாரம் செய்யலாம். ஆனால் என்னைக் கைது செய்ய முடியாது. அவ்வாறு பேசுபவர்களின் அப்பாக்கள் வந்தால்கூட இந்த சுவாமி பாபா ராம்தேவை கைது செய்ய முடியாது." என்று கூறினார்.
டாக்டர்கள் கெடு
இதனிடையே பாபா ராம்தேவிற்கும் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது. கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த சூழலில் டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் "மிகவும் துரதிர்ஷ்டவசமான" தனத கருத்தை திரும்பப் பெறுமாறு ராம்தேவை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் அலோபதி டாக்டர்கள் தங்களுக்கு எதிரான அவதூறான கருத்துக்களை திரும்ப பெற்று 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ .1000 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடருவாம் என்று எச்சரித்து இருந்தது. இந்நிலையில் தான் நடிகர் அமீர்கான் நிகழ்ச்சியின் பழைய வீடியோவை போட்டு ஆங்கில மருந்து டாக்டர்களை சீண்டியுள்ளார்.