டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கு வருது டோக்கன் சிஸ்டம் - ஜன.1முதல் புதிய விதிமுறை அமல்
2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: ஆன்லைன் முலமாக மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற மத்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைக்கு எல்லாமே மின்னணு பண பரிவர்த்தனையாகிவிட்டது. ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்வது, டாக்ஸி புக்கிங் செய்வது, மூவி டிக்கெட் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆன்லைன் மூலமாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துகிறார்கள்.
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில்.. இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.. காரணம் வேக்சின் பணிகள்?
ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகள் செய்வது பாதுகாப்பானவை என்று கூறப்பட்டாலும் அதில் பணத்தை இழந்தவர்கள் ஏராளம். எனவே ஆன்லைன் முலமாக மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற மத்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.
புதிய விதிமுறை
புதிய விதிமுறைப்படி , கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு டோக்கன் முறை பயன்படுத்தப்படும் . இதில் வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு நம்பர் , காலாவதி தேதி, CVV நம்பர் , ஓடிபி போன்ற விவரங்களை வழங்கத் தேவையில்லை. இந்த விதிமுறைகள் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும், பரிவர்த்தனை நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி உத்தரவு
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வெளியிட்ட அமைப்பு மற்றும் கார்ட் நெட்வொர்க் தவிர வேறு எந்த ஒரு நிறுவனமும் அல்லது பேமெண்ட் தளமும் இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தரவுகளைச் சேமிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு முன் சேமித்து வைக்கப்பட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தரவுகளையும் டெலிட் செய்ய வேண்டும் எனப் பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
டோக்கன் முறைக்கு மாற தயார்
இந்தப் புதிய கட்டுப்பாட்டையும் உத்தரவையும் வெளியிட மிக முக்கியமான காரணம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ஏற்படும் மோசடிகளைத் தடுக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கை கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்புதிய மாற்றத்திற்கும், டோக்கன் முறைக்கும் ஹெச்எஸ்பிசி இந்தியா, எஸ்பிஐ கார்டு, பேடிஎம், போன்பே, என்பிசிஐ ஆகியவை ஏற்கனவே தயாராகியுள்ள நிலையில் மற்ற அமைப்புகள் தயாராகி வருகிறது.
தனி டோக்கன் எண்
இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகத் தகவல் அனுப்பியுள்ளது. மற்ற வங்கிகளும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப தனியாக டோக்கன் நம்பர் உருவாக்கப்படும் . அந்த நம்பரை மட்டும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால் போதும்.
பாதுகாப்பான பண பரிவர்த்தனை
இந்த டோக்கன் நம்பரை சம்பந்தப்பட்ட வங்கியின் வெப்சைட் அல்லது மொபைல் ஆப்பிலேயே உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கான கோரிக்கையை நீங்கள் வைத்தவுடன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிவர்த்தனை நிறுவனத்திடமிருந்து கோரிக்கை வைக்கப்படும். அதன்பிறகு பரிவர்த்தனை நடைபெறும். இதன் மூலம் கார்டு பரிவர்த்தனைகள் இன்னும் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.