அட சாமி! அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே இப்படியா.. வாட்டி வதக்கிய ஏப்ரல்! 120 ஆண்டுகளில் உச்சம்
டெல்லி: சுமார் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் மிகக் கடுமையான வெப்பம் பதிவாகி உள்ளது.
அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு வரும் மே மாதம் 4ஆம் தேதி தான் ஆரம்பிக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே, நாட்டில் பல பகுதிகளில் இந்த ஆண்டு கடும் வெயில் காணப்படுகிறது.
சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். பகல் நேரங்களில், சில அடிகள் கூட வெளியே போக முடியாத அளவுக்கு வெயில் மண்டையைப் பிளக்கிறது.
வேலூரில் வீசிய வெப்ப அலை... 106 டிகிரி பதிவு! கரூர், திருச்சி, திருத்தணியிலும் மோசம்
வட இந்தியா
குறிப்பாகத் தென்னிந்தியா உடன் ஒப்பிடுகையில் வட இந்தியாவில் வெயிலின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. மே மாதம் தான் இந்தியாவில் எப்போது வெப்பம் உச்சத்தில் இருக்கும் என்றும் வட இந்தியாவில் சில பகுதிகளில் இந்த ஆண்டு வெப்பநிலை 50 டிகிரியைத் தாண்டும் வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை கூறி உள்ளது. ஏனென்றால், வட இந்தியாவில் பல பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருந்துள்ளது.
122 ஆண்டுகளில் முதல்முறை
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் எம் மொஹபத்ரா கூறுகையில், "வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் ஏப்ரல் மாதம் சராசரி அதிகபட்ச வெப்பநிலை முறையே 35.90 டிகிரி செல்சியஸ் மற்றும் 37.78 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இந்தியா முழுவதும் சராசரி வெப்பநிலை 35.05 டிகிரியாக இருந்தது, இது 122 ஆண்டுகளில் நான்காவது அதிகபட்சமாகும். வரும் மே மாதமும் கூட இதே நிலை தான் தொடரும்.
வெப்பம் அதிகம்
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளில் மே மாதத்திலும் இயல்பை விட அதிகமான வெப்பநிலையே இருக்கும். தென் இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதம் இரவு நாட்களில் வெப்பத்தின் அளவு அதிகமாகவே இருக்கும். நாட்டில் மே 2022இல் சராசரி மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாகவே இருக்கும். அதேநேரம் வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் தென்கிழக்கு தீபகற்பம் பகுதியில் மே மாதத்தில் இயல்பை விடக் குறைவாக மழை பெய்யும்.
என்ன காரணம்
வெப்பம் காரணமாக இந்தியாவில் மின் நுகர்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மழையின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் காரணம். மார்ச் மாதத்தில், வடமேற்கு இந்தியாவில் சுமார் 89 சதவீத வரை மழை குறைந்துள்ளது. அதேபோல ஏப்ரல் மாதம் மழையின் அளவு வழக்கத்தை விட 83 சதவீதம் குறைந்துள்ளது