"மதங்களும், மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன" நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை!
டெல்லி: 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். அந்த உரையில், நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம் என்றும், இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், மதங்களும் மொழிகளும் நம்மை ஒருங்கிணைத்துள்ளதாகவும் திரெளபதி முர்மு கூறியுள்ளார்.
நாட்டின் 74வது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் நாடு விடுதலை பெற்றது. இதனைத் தொடர்ந்து நமது தேசத்துக்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்து இந்தியா முழுமையான குடியரசு நாடாக உருவெடுத்த நாள் 1950 ஜனவரி 26 ஆகும்.
ஜனவரி 26ம் தேதி நாட்டின் குடியரசு தினம் நாளை எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
74வது குடியரசு தின கொண்டாட்டம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
திரெளபதி முர்மு உரை
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் நமது சாதனைகளை நாம் ஒன்றாக கொண்டாடுவோம். நாம் அனைவரும் இந்தியர்கள், பல மதங்களும், மொழிகளும் நம்மைப் பிரிக்கவில்லை. அனைவரையும் ஒன்றிணைத்துள்ளன. நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். இதுதான் இந்தியாவின் சாராம்சம்.
உலகநாடுகளுக்கு உத்வேகம்
இந்த நன்னாளில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. 74வது குடியரசு தினத்தையொட்டி அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் . அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை நமது பயணம் ஆச்சரியமானது. இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது .
தேசிய கல்விக் கொள்கை
மகாத்மா காந்தியின் குறிக்கோளின்படி அவரது வழியில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம். தேசிய கல்விக் கொள்கையில் லட்சிய மாற்றங்கள் பல செய்யப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கையில் கல்வி செயல்முறையை விரிவுபடுத்துவதிலும், ஆழப்படுத்துவதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. ககன்யான் திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக நமது நாடு மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது .
மத்திய அரசின் திட்டம்
நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்று நம்பிக்கை உள்ளது. இளம்பெண்கள் கல்வி உள்ளிட்ட துறைகளில் பங்களிப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது . மத்திய அரசின் பல திட்டங்கள் ஏழை எளியவர்களுக்கு அதிக பலன் தருவதாக உள்ளன. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் ஏழைகளுக்கு கொரோனா வைரஸ் காலத்தில் நிவாரணம் வழங்கியுள்ளது
அரசியலமைப்பு
நமது அரசியல் சாசனம் கடந்த காலத்தில், நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் என எப்போதும் வழிகாட்டியாகவே இருக்கிறது . நமது அரசியல் சாசனத்தை பின்பற்றுவது நமது கடமையாகும். நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கிய டாக்டர் அம்பேத்கருக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். நமது நாகரிகம் மிகவும் பழமையானது.
ஜி20 மாநாடு
அதேநேரத்தில் நமது நவீன ஜனநாயகம் இயற்கையாகவே மிகவும் இளமையானது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு பார்வை, இந்தியாவை நம்பிக்கையான தேசமாக மாற்ற வழிவகுத்தது. ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது சிறந்த உலகம், ஜனநாயகத்தை வடிவமைப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. என்று தெரிவித்துள்ளார்.