மத்திய அரசு இல்லை என்றதே.. தடுப்பூசி செலுத்தியவர்கள் தகவல்களை கசியவிட்டதாக சுகாதார ஊழியர் மகன் கைது
டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் தரவுகளை கசியவிட்டதாக பீகாரில் சுகாதார ஊழியர் ஒருவரின் மகனை டெல்லி உளவு பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. முன்னதாக கோவின் செயலியில் இருந்து தகவல்கள் கசியவில்லை என மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது. தடுப்பூசி செலுத்தும் பணியை சிறப்பாக கையாளவும் யாரும் விடுபடாத வகையில் பணிகளை மேற்கொள்ளும் விதமாகவும் கோவின் (CoWIN) செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் ஆதார் எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டன. கோவின் செயலியில் பொதுமக்கள் அளிக்கும் இந்த தகவல்களின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகங்கள் எழுப்பின.

இந்த நிலையில், டெலிகிராம் 'பாட்' இல் கோவின் செயலியில் இருந்து தனிப்பட்ட தரவுகள் கசிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, ஒருவரின் செல்போன் எண்ணை குறிப்பிடுவதன் மூலம், அந்த எண் தொடர்பாக கோவின் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்த ஒருநபரின் தரவுகள், அடையாள விவரங்கள் என அனைத்தும் சர்வ சாதாரணமாக கிடைப்பதாக செய்திகள் பரவின. அரசியல் பிரபலங்களின் செல்போன் எண்கள், ஆதார் எண்கள் ஆகியவையும் வெளியாகின.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக சாடின. எனினும் இந்த தகவலை மத்திய அரசு மறுத்தது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகர் அளித்த விளக்கத்தில், "கோவின் தகவல் கசிந்ததாக செய்திகள் வெளியானதும், சிஇஆா்டி உடனடியாக பாதுகாப்பை மறு ஆய்வு செய்தது. வெளியாகி நேரடியாக கோவின் தளத்தில் இருந்து கசிந்ததாக தெரியவில்லை.
முன்பு திருடப்பட்ட தகவல்களை சேமித்து வைத்திருக்கும் 'திரட் டாக்டா்' தரவுகளில் இருந்து 'டெலிகாரம் பாட்' செல்போன் எண்களை பதிவிட்டதும் வெளியிடுகிறது" என்று கூறினார். இது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், கோவின் செயலியில் உள்ள தரவுகளை கசியவிட்டதாக பீகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறையின் உளவு பிரிவான IFFSO இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தற்போது கைதாகியிருக்கும் இந்த நபர்தான், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் தனிப்பட்ட தரவுகளை சமூக ஊடகங்களில் கசிய விட்டதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. சுகாதார பணியாளரான தனது தாயார் உதவியுடன் கோவின் தளத்தில் உள்ள டேட்டாக்களை இந்த நபர் சேகரித்து அவற்றை டெலிகராமில் பரப்பிவிட்டது முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications