மணல் குவாரி வழக்கு-தமிழக மாவட்ட ஆட்சியர்களை துன்புறுத்துவதா? அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் 'டோஸ்'
டெல்லி: மணல் குவாரிகளில் மணல் கொள்ளை (மணல் கடத்தல்) வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகும் தமிழ்நாட்டின் மாவட்ட ஆட்சியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கடுமையாக அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் மணல் அள்ளப்படுகிறது; இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என அமலாக்கத்துறை பல வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்குகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு மணல் குவாரிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சோதனையும் பறிமுதலும்: அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனைகளில் ரூ.2.33 கோடி ரொக்கம் மற்றும் ரூ56 லட்சம் தங்க நகைகள், அசையா சொத்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 30 வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறை முடக்கி இருந்தது. மணல் ஒப்பந்ததாரர்களான சண்முக பாண்டியன், கருப்பையா, ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்தது. அரசு ஆவணங்களின் காட்டப்பட்டுள்ள அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டதாக் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு அரசுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு.
பொறியாளர் முத்தையா: அப்போது தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து ரூ128 கோடி சொத்துக்கள், மணல் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்கின் ரூ2.25 கோடி ரூபாய் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது.
5 மாவட்ட ஆட்சியர்கள்: அத்துடன் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 5 மாவட்ட ஆட்சியர்களும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் 5 மாவட்ட ஆட்சியர்களுக்காக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில், விசாரணை நடைபெறலாம்; மாவட்ட ஆட்சியர்க்ள் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் போனது அமலாக்கத்துறை. உச்சநீதிமன்றமோ, 5 மாவட்ட ஆட்சியர்களும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
ஆஜரான 5 மாவட்ட ஆட்சியர்கள்: இதையடுத்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், வேலூர் ஆட்சியர்கள் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. இதனடிப்படையில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப், கரூர் ஆட்சியர் தங்கவேலு, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை: இந்த நிலையில் விசாரணைக்கு வந்த மாவட்ட ஆட்சியர்கள் போதுமான ஆவணங்களைத் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீண்டும் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது ஆட்சியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்ற உத்தரவுப்படி 5 மாவட்ட ஆட்சியர்களும் விசாரணைக்கு ஆஜரானதாகக் குறிப்பிட்டார்.
ஆட்சியர்களை துன்புறுத்தக் கூடாது: அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஜோகேப் ஹூசைன், விசாரணைக்கு ஆட்சியர்கள் ஆஜராகினர். ஆனால் போதுமான ஆவணங்களை அவர்கள் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். இதை கபில் சிபல் திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன், முற்பகல் 11 மணிக்கு விசாரணை ஆஜரான மாவட்ட ஆட்சியர்களை இரவு 8.30 மணி வரை உட்கார வைத்திருந்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனவும் நீதிபதியிடம் முறையிட்டார் கபில் சிபல். இதனால், விசாரணைக்கு வரும் மாவட்ட ஆட்சியர்களை அமலாக்கத்துறை அதிகாரிகளை தேவை இல்லாமல் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டார். இந்த வழக்கு கோடை விடுமுறைக்குப் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications