மத்திய பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள்..நிர்மலா சீதாராமன் கூறிய சப்தரிஷிகள் யார் தெரியுமா?
அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சப்தரிஷிகளின் ஆசியுடன் 7 முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் குறிப்பிட்ட 7 முக்கிய அம்சங்கள் என்னென்ன சப்தரிஷிகள் யார் அவர்களின் சிறப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும்.
நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழு இந்த பட்ஜெட்டைஉருவாக்கி உள்ளது. மத்திய நிதித் துறை செயலர் டிவி சோமநாதன் பொருளாதார விவகார துறை செயலர் அஜய் சேத், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலர் துகின் கந்தா பாண்டே, வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா, நிதி சேவைகள் துறை செயலர் விவேக் ஜோஷி, தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் இந்தப் பட்ஜெட் உருவாக்கத்தில் பங்கு வகித்துள்ளனர்.
பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட் முந்தைய பட்ஜெட்டில் போடப்பட்ட அடித்தளம் மற்றும் இந்தியாவிற்கான 100 வரையப்பட்ட வரைபடத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் என்று நம்புகிறோம். நடப்பு ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சவால்கள் இருந்தபோதிலும் பொருளாதாரம் சரியான பாதையில் உள்ளது.
உலகம் இந்தியாவை ஒளிரும் நட்சத்திரமாக அங்கீகரித்துள்ளது, நடப்பு ஆண்டுக்கான நமது வளர்ச்சி 7.0% என மதிப்பிடப்பட்டுள்ளது, இது அனைத்து முக்கிய பொருளாதாரங்களிலும் மிக உயர்ந்தது, கொரோன தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போரினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளதார வளர்ச்சி சீராக உள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, 28 மாதங்களுக்கு 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தின் மூலம் யாரும் பசியுடன் படுக்கைக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்தோம். அடுத்த 1 வருடத்திற்கு அனைத்து அந்தியோதையா மற்றும் முன்னுரிமை குடும்பங்களுக்கும் ஜனவரி 1ஆம் தேதி 2023 முதல் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஏழு முன்னுரிமைகளில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார், அதை அவர் "அமிர்த காலத்தில் நம்மை வழிநடத்தும் சப்தரிஷிகள் என்று அழைத்தார். உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி கட்டத்தை அடையும் வரை முயற்சி, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறனை கட்டவிழ்த்து விடுதல்,பசுமை வளர்ச்சி,இளைஞர் சக்தி,நிதித்துறை ஆகிய 7 அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன என்று கூறி விளக்கம் அளித்தார்.
உலக நாடுகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உற்று நோக்குவதாக குறிப்பிட்டார். அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சவால்கள் இருந்தாலும் இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
அமிர்தகாலம் என்பது வேதகால ஜோதிடத்தில் இருந்து வந்த வார்த்தை இது. மோடி தெரிவித்து வரும் புதிய இந்தியாவில் அமிர்த காலம் தொடங்கிவிட்டதாக பாரதிய ஜனதா நம்பும் நிலையில், இந்த பட்ஜெட்டை அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷிகள் வேதங்களிலும் இந்துதர்ம நூல்களிலும் மிக உயர்வாகப் போற்றப்படுகின்றனர். எத்தனையோ ரிஷிகளும் மகான்களும் இருந்தாலும் இந்து சமயத்தில் சப்த ரிஷிகள் முக்கியமாக போற்றப்படுகின்றனர். அத்திரி, பாரத்துவாசர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிச்டர், விஷுவாமித்ரர் ஆகிய இவர்கள் நான்கு வேதங்களையும் இலக்கியங்களையும் தனது தவ வலிமையால் கற்றறிந்தவர்கள்.
அத்ரி என்பவர் ரிக்வேதத்தின் ஐந்தாவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவரின் மனைவி அனுசுய தேவி. தத்தரேயர் மற்றும் துருவாசரின் தந்தை.
பரத்வாஜர் என்பவர் ரிக்வேதத்தின் ஆறாவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவர் துரோணாச்சாரியாரின் தந்தை.
கௌதமர் என்பவர் கோதமர் என்றும் அழைக்கப்படுகிறார். ரிக்வேதத்தின் நான்காவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவரின் மனைவி அகலிகை. ஜமதக்னி என்பவர் சாஸ்திரங்களிலும் தற்காப்புக் கலையிலும் தேர்ந்தவர். இவர் பரசுராமரின் தந்தை.
கஷ்யபர் என்பவர் கஷ்யப்ப சம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலை இயற்றியவர். இவரின் பிறப்பிடமான காஷ்மீருக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. வசிஷ்டர் என்பவர் ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவரின் மனைவி அருந்ததி.
விஷ்வாமித்ரர் என்பவர் ரிக்வேதத்தின் மூன்றாவது மண்டலப் பாடல்களை அருளியவர். காயத்திரி மந்திரத்தை பரமாத்மனிடமிருந்து பெற்று வேதத்தில் வெளிபடுத்தியவர். இந்த சப்தரிஷிகளின் ஆசியுடன் அமிர்த கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.