“சபாஷ்”.. காங்கிரஸ் தேர்தல் விதிக்கு சசிதரூர் வரவேற்பு.. பதவியை “ராஜினாமா” செய்ததாக விளக்கம்
டெல்லி: வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்காக தேர்தல் அலுவலர் வெளியிட்ட நடத்தை விதிகளுக்கு வேட்பாளர் சசி தரூர் வரவேற்பு அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.
சசி தரூர் அந்த லெவல் வேலைக்கு சரிப்படமாட்டாரு.. கார்கேதான் சரியான சாய்ஸ்.. சொல்வது அசோக் கெலாட்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி நேற்று (செப். 30 ஆம் தேதி) வரை நிறைவடைந்தது.
வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸில் எதிர்ப்பலை இருப்பதால் கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
நடத்தை விதி
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி மதுசுதன் மிஸ்திரி நடத்தை விதிகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 2 வேட்பாளர்களில் யாருக்கேனும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய விரும்பினால் முதலில் கட்சிப் பதவிலிருந்து விலக வேண்டும். மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேட்பாளர்கள் வருகையின்போது அவர்களை மரியாதை நிமித்தமாக வரவேற்கலாம். மாநில நிர்வாகிகளை சந்திக்க வேட்பாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.
எச்சரிக்கை
தனிப்பட்ட முறையில் எந்த மாநிலத் தலைவரும் வேட்பாளருக்கு அதரவாக கூட்டம் திரட்டக்கூடாது. வேட்பாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று வாகனங்களை ஏற்பாடு செய்வது, விரும்பத்தகாத வகையில் பிரச்சாரம் செய்வது கூடாது. மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் எந்த வேட்பாளரின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் நடந்துகொள்வதும் கட்சியை அவமதிப்பதற்கு சமம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சசி தரூர் வரவேற்பு
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தை விதிகளை வேட்பாளர் சசி தரூர் வரவேற்று இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரிகளின் அறிவிப்பை வரவேற்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், "இதுகுறித்து என்னிடம் கேட்பவர்களுக்கு, நான் கடந்த மாதமே காங்கிரஸில் வகித்த பதவியில் இருந்து விலகிவிட்டேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.