சீதாராம் யெச்சூரி தாராளமாக காஷ்மீர் செல்லலாம்.. ஆனால்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஜம்மு காஷ்மீரில் உள்ள உறவினர்களை, கட்சி உறுப்பினர்களை சந்திக்க சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள உறவினர்களை, கட்சி உறுப்பினர்களை சந்திக்க சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரை இரண்டாக பிரித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
காஷ்மீரில் தற்போது முன்னாள் முதல்வர்கள் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் 174 தலைவர்கள் தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் 3 வாரமாக வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அனுமதி இல்லை
அதேபோல் காஷ்மீருக்குள் இந்தியாவின் பிற பகுதியில் இருந்து அரசியல் தலைவர்கள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. கடந்த வாரம் காஷ்மீர் நிலைமையை பார்வையிட எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, கே சி வேணுகோபால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெட்சூரி, திரிணாமுல் தலைவர் தினேஷ் திரிவேதி, திமுக சார்பாக திருச்சி சிவா உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட தலைவர்கள் காஷ்மீர் சென்றனர்.
சிக்கல்
ஆனால் இவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எல்லோரையும் ராணுவம் பாதியில் திருப்பி அனுப்பியது. அவர்களுடன் சென்ற செய்தியாளர்களையும் ராணுவ வீரர்கள் மொத்தமாக திருப்பி அனுப்பினார்கள்.
என்ன வழக்கு
இதையடுத்து காஷ்மீரில் உள்ள உறவினர்களை மற்றும் கட்சி உறுப்பினர்களை (யோசுப் தரிகாமி) பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி வழக்கு தொடுத்தார். அதேபோல் ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர்கள் சிலரும் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.
விசாரணை
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அதன்பின் அவர்கள் முக்கியமான உத்தரவை பிறப்பித்தனர்.அதில்,சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு காஷ்மீர் செல்ல அனுமதி அளிக்கிறோம். அவரும் இந்திய குடிமகன்தான். இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் அவர் செல்லலாம்.
அதிரடி
அவருக்கு முழு அனுமதி வழங்குகிறோம். காஷ்மீரில் உள்ள குடும்பத்தினரை, கட்சி உறுப்பினரை அவர் சந்திக்க தடையில்லை. மற்ற கட்சித் தலைவர்களின் குடும்பம் அங்கு இருந்தாலும் அவர்கள் செல்ல அனுமதி வழங்குகிறோம்.
ஆனால் என்ன
ஆனால் காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை செய்ய கூடாது. அங்கு இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு செல்லும் அரசியல் தலைவர்கள் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.