யார் உண்மையான சிவசேனா? தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
டெல்லி: உண்மையான சிவசேனா கட்சி எது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனே முடிவெடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏக்நாத் ஷிண்டே தலைமையை ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தாங்களே உண்மயான சிவசேனா என்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் கடிதம் கொடுத்தது ஏக்நாத் ஷிண்டே கோஷ்டி. இது தொடர்பாக ஆகஸ்ட் 8-ந் தேதிக்குள் இருதரப்பும் ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் ஏக்நாத் ஷிண்டே தர்ப்பு கொடுத்த மனு மீது முடிவு எடுக்கக் கூடாது என உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் எது உண்மையான சிவசேனா என்பதில் முடிவெடுக்கக் கூடாது என உத்தவ் தாக்கரே வலியுறுத்தியது.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச், இம்மனுவை விசாரித்தது. இந்த விசாரணையின் போது, எது உண்மையான சிவசேனா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
மேலும் சிவசேனா தொடர்பான இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றலாமா? இல்லையா? என்பது தொடர்பாக திங்கள்கிழமையன்று முடிவெடுக்கப்படும் என்றும் இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவிக்கும் வரை தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்றைய உத்தரவானது உத்தவ் தாக்கரே தரப்புக்கு சற்றே ஆறுதலைத் தரக் கூடியது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.