உள்நோக்கத்துடன் வழக்குகளை எடுக்கும் அமலாக்கத்துறை- அங்கித் திவாரி கேஸில் உச்சநீதிமன்றம் டோஸ்!
டெல்லி: அமலாக்கத்துறையானது உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையிலெடுக்கிறது; பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை செயல்படுவதைத் தடுக்க வேண்டும் என லஞ்சம் வாங்கி சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்குகளை வைத்து ரூ20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவர் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீசார் சுற்றி வளைத்த போது அங்கித் திவாரி தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்தனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

மேலும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மதுரை அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் அங்கித் திவாரி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் இந்த வழக்கை விசாரித்தார். இவ்வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கத்துறை எந்த வழக்கையும் விசாரிப்பதே கிடையாது. மபி, உபி, குஜராத் மாநிலத்தில் எத்தனையோ வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால் அமலாக்கத்துறை அந்த வழக்குகளை கையில் எடுப்பதே கிடையாது. அஸ்ஸாம் முதல்வர் மீதான வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. அதை விசாரித்ததா அமலாக்கத்துறை என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில், அங்கித் திவாரி லஞ்சம் பெற்றது தொடர்பாக நாங்கள் கூட அவரை கைது செய்து விசாரிக்கலாம் என நினைக்கிறோம் என தெரிவித்தது. இதற்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நீங்கள்தானே.. எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில்தான் யாரையாவது கைது செய்வீர்கள் என பதிலடி கொடுத்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விஸ்வநாதன், அமலாக்கத்துறையானது பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதைத் தடுக்க புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அமலாக்கத்துறை பழிவாங்குகிறது என்கிற புகாரே வராத வகையில் எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நெறிமுறைகள் வகுக்கலாம். அமலாக்கத்துறையும் உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுக்கத்தான் செய்கிறது. அப்படியான வழக்குகளில் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்றார்.
மேலும் சிபிஐக்கு மாற்றக் கோரிய அமலாக்கத்துறை மனு மீது தமிழ்நாடு அரசு 2 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி விஸ்வநாதன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications