பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீடுக்கு விதிகளை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி. இடஒதுக்கீடு பிரிவினருக்கு விதிகளைத் தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முதல் நாள் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு பெற்றவர்.. மறுநாள் பாஜக வேட்பாளர்.. பஞ்சாப் தேர்தலில் அதகளம்
மத்திய அரசுப் பணிகளில் பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை; ஆகையால் பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று ஜர்னைல்சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மத்திய அரசு விளக்கம்
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினார். மத்திய அரசு தமது பிரமாணப் பத்திரத்தில், தகுதி அற்றவர்கள் யாருக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பதவி உயர்வு வழங்குவதற்கு என அமைக்கப்பட்ட குழு பல்வேறு அம்சங்களை பரிசீலனை செய்தே முடிவுகளை எடுக்கிறது என தெரிவித்திருந்தது.
ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு
இவ்வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில், பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி, பிரிவினருக்கான இடஒதுக்கீடு பிரதிநிதித்துவ அளவை உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்ய இயலாது. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் போதுமானதா? இல்லையா? என்கிற தரவுகளை மாநில அரசுகள்தான் சேகரிக்கவும் முடியும் என கூறியுள்ளது.
மனு தள்ளுபடி
மேலும் இந்த விவகாரம் மத்திய- மாநில அரசுகளினுடைய கொள்கை முடிவு. இதில் உச்சநீதிமன்றம் எந்த விதமான உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஆகையால் மத்திய அரசுப் பணிகளில் பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கான நிபந்தனைகளை தளர்த்தக் கோரும் ஜர்னைல்சிங்கின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.