ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இயக்கக் கூடாது- ஆலை நிர்வாகம்
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி தரக் கூடாது என ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கெனவே நடந்த விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்ஸிஜன் உற்பத்தியை செய்யலாமே என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலை நிர்வாகம் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையில் மாநில அரசு ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி அளித்தால் ஆபத்து ஏற்படலாம் என்றும் தூத்துக்குடி ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு முன் தயாரிப்பு மேற்கொள்ள அனுமதி அளிக்கவும் ஆலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக ஸ்டெர்லைட் வழக்கு.. நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!
ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ளும் நிபுணர்கள் எங்களிடம் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் அதற்கான நிபுணத்துவம் பெற்றவர் இல்லை என ஸ்டெர்லைட் ஆலை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பதிலளித்த தமிழக அரசு ஸ்டெர்லைட்டின் வாதத்திற்கு உரிய பதிலை தருவோம் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில் தமிழக அரசின் சார்பில் வைக்கப்படும் வாதங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.