டெல்லி போலீசார் தாக்கியதில் ப.சிதம்பரம் கையில் எலும்பு முறிவு- நலமுடன் இருப்பதாக ட்வீட்!
டெல்லி: டெல்லியில் காங்கிரசார் இன்று ராகுல் காந்திக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்தில் போலீசார் தாக்குதல் நடத்தியதில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. டெல்லி போலீசார் தாக்குதலில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தாம் தற்போது நலமுடன் இருப்பதாக ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று விசாரித்தனர். இந்த விசாரணைக்கு ராகுல் காந்தி அழைக்கப்பட்டதை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பிரம்மாண்ட பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர்.

ராகுல் தலைமையில் போராட்டம்
டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து அமலாக்கப் பிரிவு அலுவலகம் வரை நூற்றுக்கணக்கானோர் பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். இந்த பாதையில் பல இடங்களில் போலீசார் தடுப்புகளையும் அமைத்திருந்தனர். போலீசார் தடுப்புகளைத் தாண்டி காங்கிரசார் பேரணியை நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த பேரணியில் பிரியங்கா காந்தியும் பங்கேற்றார்.

காங். நிர்வாகிகள் கைது
இதனையடுத்து போராட்டங்களில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி போலீஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் பெரும்பாலான தொண்டர்களும் நிர்வாகிகளும் ரிமாண்ட் செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ப.சிதம்பரம் மீது தாக்குதல்
இந்த நிலையில் டெல்லி போராட்டத்தின் போது போலீசார் தாக்குதல் நடத்தியதில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள ப.சிதம்பரம், நான் தற்போது நலமாக இருக்கிறேன்; நாளை முதல் எனது வழக்கமான பணிகளை மேற்கொள்வேன். இந்த சிறிய காயத்தில் இருந்து 10 நாட்களில் குணமடைந்துவிடுவேன் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார்.

திருமாவளவன் கண்டனம்
ப.சிதம்பரம் மீதான டெல்லி போலீசின் இத்தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் தமது ட்விட்டர் பக்கத்தில், அமித்ஷா தலைமையிலான தில்லி காவல்துறையின் தாக்குதலில் ப.சிதம்பரம் அவர்களின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. காங்கிரசு பேரணியில் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவல்துறையின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறோம் என்றார்.

ஜோதிமணி கண்டனம்
காங். எம்.பி. ஜோதிமணி தமது சமூக வலைதளப் பக்கத்தில், ப.சிதம்பரம் அவர்களிடம் தில்லி காவல்துறை அத்து மீறி நடந்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மூன்று காவலர்கள் அவர் மீது கைவைத்து தள்ளியதில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று இருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சி கதையை எழுதிய ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரிடம் காவல்துறையினர் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? அவரை கைது செய்தீர்கள், அமலாக்கத்துறை சிபிஐ போன்றவற்றின் மூலம் அவரையும் அவரது குடும்பத்தையும் கடுமையாக தொந்தரவு செய்தீர்கள். ஆனாலும் அவரது உறுதி குலையாது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications