"ட்விஸ்ட்..!" காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து விலகல்? சசி தரூர் கொடுத்த பரபர விளக்கம்
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் இருந்து சசி தரூர் விலகியதாகத் தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கம் அளித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் சில ஆண்டுகளாகவே தலைவர் பொறுப்பில் யாரும் இல்லை. சோனியா காந்தி இடைக்கால தலைவராக மட்டுமே உள்ளார். உடல்நிலை காரணமாக அவர் தலைவர் பொறுப்பு ஏற்க மறுத்துவிட்டார்.
புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்திய நிலையில், வரும் 17ஆம் தேதி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

தலைவர் தேர்தல்
இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட நேரு குடும்பத்தினர் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று சொல்லப்பட்டது. இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவர் பொறுப்பிற்கு வரும் சூழல் உருவானது. முதலில் அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து விலக அங்குள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பரவிய தகவல்
இதையடுத்து மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு எதிராகத் தொடர்ந்து தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்த கொடுத்த சசி தரூர் சத்தமின்றி வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே நேரடி போட்டி உருவாகி உள்ளது. தேர்தலில் வேட்புமனுவை வாபஸ் பெற நேற்று தான் கடைசி நாள். இதற்கிடையே நேற்று சசி தரூர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாகத் தகவல் பரவியது.

வதந்தி
இருப்பினும், திடீர் திருப்பமாக அது வதந்தி என்று அவர் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில், "டெல்லியில் இருக்கும் சில தலைவர்கள் நான் தேர்தலில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரவி வருகின்றனர். நான் உங்களுக்கு ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். நான் இந்த சேலஞ்சில் இருந்து பின்வாங்கவில்லை. என் வாழ்நாளில் என்றும் எதற்கும் நான் பின்வாங்கியது இல்லை.

பின்வாங்க மாட்டேன்
இது கட்சிக்குள் நடக்கும் ஒரு நட்பு ரீதியான போட்டி, ஆனால் அது இறுதிவரை போட்டி இருக்கவே செய்யும்.. நான் கடைசி வரை களத்தில் இருந்து போராடவே விரும்புகிறேன்" என்று அந்த வீடியோவில் அவர் கூறுகிறார். சசி தரூர் தேர்தலில் இருந்து விலகுவதாகத் தகவல் பரவுவதும் அதன் பின்னர் அவர் விளக்கம் அளிப்பதும் இது முதல்முறை இல்லை. இந்தத் தேர்தல் விவகாரம் குறித்து முன்னதாக ஒருமுறை பேசியிருந்த அவர், "யாரும் என்னிடம் வந்து வேட்புமனுவை வாபஸ் பெறச் சொல்லவில்லை. பாஜகவை எதிர்கொள்ள, நாட்டில் வலுவான காங்கிரஸ் கட்சி தேவை. வலுவான காங்கிரஸை உருவாக்கும் செயல்முறை தான் இது.

மறுத்த ராகுல்
கடந்த அக்டோபர் மாதம் வேட்புமனுவை வாபஸ் பெற என்னிடம் சொல்லுமாறு ராகுல் காந்தியிடம் சிலர் கேட்டு உள்ளனர். இருப்பினும், ராகுல் காந்தி அப்படிச் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். கட்சித் தலைவர் பதவிக்கு விரும்பும் யார் வேண்டுமென்றாலும் போட்டியிடலாம் என்றும் அதைத்தான் 10 ஆண்டுகளாகச் சொல்லி வருவதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். ராகுல் காந்தியே என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இதனால் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்" என்று அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications