லூட்டியன்ஸ் அவுட்... ராஜாஜி இன்: குடியரசுத் தலைவர் மாளிகையில் அரங்கேறிய வரலாற்று மாற்றம்.. பின்னணி
டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் காலனித்துவ கால அடையாளங்களை அகற்றும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்டியன்ஸின் சிலைக்குப் பதிலாக, சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலான சி. ராஜகோபாலாச்சாரியின் (ராஜாஜி) உருவ சிலையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார்.
அசோக் மண்டபத்திற்கு அருகில் : சிலை நிறுவப்பட்டுள்ளது
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அசோக் மண்டபத்திற்கு அருகிலுள்ள பிரமாண்ட படிக்கட்டு பகுதியில் (Grand Open Staircase) இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது 'மன் கி பாத்' வானொலி உரையில், அடிமை மனப்பான்மையின் அடையாளங்களை அகற்றி நாட்டின் சிறந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

பிரதமர் சொன்ன முக்கிய செய்தி
இந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தி குறிப்பில், "இது வெறும் சிலை மாற்றம் அல்ல; இது மன ரீதியான காலனித்துவ ஒழிப்பு (Mental Decolonisation) நடவடிக்கை. நாட்டின் விதியை வடிவமைத்த பெருமகன்களுக்கு உரிய மதிப்பளிப்பதும், அடிமை மனப்பான்மையின் சுவடுகளை அகற்றுவதும் நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.. அதன் அடையாளமாக சிலை மாற்றப்பட்டு உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ராஜாஜியின் நேர்மை, சுயக்கட்டுப்பாடு மற்றும் சுதந்திரமான சிந்தனை இன்றும் நமக்கு உத்வேகம் அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் சிலைகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நீடித்தன, ஆனால் நாட்டின் சிறந்த மைந்தர்களுக்கு அங்கு இடம் மறுக்கப்பட்டது" என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சிறப்பு விழா:
இன்று நடைபெற்ற 'ராஜாஜி உற்சவம்' விழாவில், வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களும் இசை வடிவில் பாடப்பட்டன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பின்வரும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்:
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, எஸ். ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
மற்றும் ராஜாஜியின் குடும்ப உறுப்பினர்கள்.
யார் இந்த எட்வின் லூட்டியன்ஸ்?
1912-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் புதிய தலைநகராக டெல்லியை வடிவமைக்க நியமிக்கப்பட்டவர் எட்வின் லூட்டியன்ஸ். தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை (அன்றைய வைசிராய் மாளிகை) உட்பட டெல்லியின் பல முக்கிய கட்டிடங்கள் இவருடைய வடிவமைப்பில் உருவானவை. இதனாலேயே இப்பகுதி 'லூட்டியன்ஸ் டெல்லி' என்று அழைக்கப்படுகிறது.
தற்போது அந்த கட்டிடத்தின் உள்ளேயே ராஜாஜி சிலை நிறுவப்பட்டுள்ளது, இந்திய அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications