உடலுறவுக்கு முன்பே நட்சத்திரம், ஜாதகம் பார்த்திருக்க வேண்டாமா? பாலியல் கேஸில் உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: ஒரு எஸ்பி மீது, பெண் டிஎஸ்பி மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றிருக்கிறது.. அப்போது நீதிபதிகள் இரு தரப்பிலும் சுமூகமான தீர்வை எட்டுவதற்காக, ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டலை மத்தியஸ்தராக நியமிப்பதாக உத்தரவிட்டனர். ஆனாலும் இந்த வழக்கின் உத்தரவின்போது நீதிபதி சொன்ன கருத்து, பலரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரும், துணை கண்காணிப்பாளர் ஒருவரும் கடந்த 2014ல், ஒரே மாவட்டத்தில் பணியாற்றியிருக்கிறார்.

இவர்கள் இருவருமே அப்போது நெருங்கி பழகியிருக்கிறார்கள்.. ஒருகட்டத்தில் பெண் டிஎஸ்பியை திருமணம் செய்து கொள்வதாக எஸ்பி உறுதி தந்துள்ளார்..
உச்ச நீதிமன்றம் நீதிபதி
இதனால் வருங்கால கணவர் என்ற ரீதியில், பெண் டிஎஸ்பியும் அவரை அதிகமாகவே நம்பியிருக்கிறார்.. இதனால் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது... இதற்கு பிறகு, பெண் டிஎஸ்பியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று எஸ்பி சொல்லிவிட்டாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண், எஸ்பி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கினை பாட்னா ஹைகோர்ட் ரத்து செய்துவிட்டது. உடனே இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, அப்பீலுக்கு சென்றார்.
அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது நீதிபதிகள், ஜே.பி.பரிதிவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் திருமணத்திலிருந்து பின்வாங்கினார் என்று கேட்டனர்..
ஜாதகம் பார்த்தீர்களா
பெண் அதிகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இருவரின் ஜாதகங்களும் பொருந்தவில்லை" என்று சொல்லி, பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் எஸ்பி என்று தெரிவித்தனர்.
உடனே நீதிபதி ஜே.பி. பார்திவாலா "நட்சத்திரங்கள் பொருந்தவில்லை என்றால், நல்ல திருமண வாழ்க்கையை எப்படி வாழ முடியும்? ஆனாலும் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்பே நீங்கள் ஜாதகங்களைப் பொருத்திப் பார்த்திருக்க வேண்டும் அல்லவா? திருமணம் செய்யும் நேரத்தில்தான் ஜோதிரை தேடி போவீர்களா?
ஜாதகப் பொருத்தம் என்ற கலாச்சார காரணத்தை வைத்து ஒருவர் திருமண வாக்குறுதியை மீறுவது, அவர் அளித்த வாக்குறுதியின் நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது" என்றார்.
அதற்கு பெண் அதிகாரி தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் பெண் வற்புறுத்தப்பட்டே பாலியல் உறவுக்கு சம்மதிக்க வைக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
நீதிபதிகள் உத்தரவு
இதையடுத்து நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் டிஎஸ்பியானவர் வற்புறுத்தப்பட்டார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். இதுபோன்ற வழக்கு வந்தால் அவர் ஏற்றுக்கொள்வீர்களா? இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் தொடர்ந்து மோதுவது என்பது யாருக்கும் பயன் கிடையாது.
இந்த வழக்கில் பல முக்கியமான சட்டப் புள்ளிகள் அடங்கியுள்ளன.. பாலியல் உறவு கற்பழிப்பாகுமா? திருமணத்தின் பொய்யான வாக்குறுதி, சம்மதத்தின் பேரில் நடந்ததாகத் தோன்றும் பாலியல் உறவை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376(2)(n)-ன் கீழ் கற்பழிப்பாக மாற்றுமா?
பாலியல் உறவுக்காக மட்டுமே வாக்குறுதி அளிக்கப்பட்டதா, அல்லது தொடக்கத்திலேயே திருமணம் செய்ய உண்மையாகவே எண்ணம் இருந்ததா? ஜாதகம் பொருந்தவில்லை என்ற காரணம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்மையிலேயே திருமணம் செய்ய எண்ணம் இல்லை என்பதை காட்டுகிறதா?
சுமூக தீர்வு காண வேண்டும்
எனவே இருவருக்கும் இடையே சுமூகமான தீர்வை எட்டுவதற்காக, ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டலை மத்தியஸ்தராக நியமிக்கிறோம்" என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
பாலியல் உறவுக்கு முன்பே ஜாதகம் பார்த்திருக்க வேண்டாமா? காவல்துறை அதிகாரிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கேட்டிருப்பது பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications