தனியார் மையங்களில் மந்தமாக நடக்கும் வேக்சின் பணிகள்.. உடனடி நடவடிக்கை தேவை.. மத்திய அரசு உத்தரவு
டெல்லி: நாட்டிலுள்ள சில மாநிலங்களில் தனியார் மையங்களில் வேக்சின் பணிகள் மிக மெதுவாக நடைபெறுவது கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை, மாநில அரசுகள் இதைத் தினசரி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை மெல்லக் குறைந்துள்ள நிலையில், வேக்சின் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் பல மாநிலங்களில் வேக்சின் பணிகள் மெதுவாகவே நடைபெறுகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், 15 மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை செயலாளர்களுடன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

வேக்சின் பணிகள்
அதில் வேக்சின் பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி அவர் அறிவுறுத்தினார். நாட்டிலுள்ள தனியார் வேக்சின் மையங்கள் தடுப்பூசி ஆர்டர் செய்வதில் தாமதம், வேக்சினை பெற்றுக் கொள்வதிலும், அதற்கான பணத்தைச் செலுத்துவதிலும் காலதாமதம் செய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டிலுள்ள பல தனியார் தடுப்பூசி மையங்கள் தேவையான வேக்சின்களை ஆர்டர் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாநிலங்கள்
இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து மாநிலங்களும் தனியார் மையங்களில் வேக்சின் பணிகள் முறையாகவும் வேகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தினசரி ஆய்வு செய்ய வேண்டும். சில சமயங்களில் வேக்சின் ஆர்டர் செய்துவிட்டு தனியார் மருத்துவமனைகள் சரியான நேரத்தில் பணத்தைச் செலுத்துவதில்லை. சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படுவதைத் தனியார் மருத்துவமனைகளும் மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும்.

தனியார் மையங்கள்
சில தனியார் மருத்துவமனைகள் டெலிவரி செய்யப்பட்ட வேக்சின்களை தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்வதில்லை. சில மாநிலங்களில் வேக்சின் எடுத்துச் செல்லப்பட்டாலும்கூட தடுப்பூசி பணிகள் மெதுவாகவே நடைபெறுகிறது. இது கவலையளிக்கும் ஒரு விஷயம். எனவே மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் இதிலுள்ள சிக்கலை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேக்சின் போடும் பணிகளை விரைவாக மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

தெரியப்படுத்த வேண்டும்
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு வேக்சின் உள்ளன என்பதைப் பொதுமக்களுக்கு மாநில சுகாதாரத் துறை கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறைச் செயலர்கள் பங்கேற்றனர். காணொலி மூலம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் வேக்சின் உற்பத்தியாளர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications