காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக அசோக் கெலாட் பொறுப்பேற்க சோனியா வலியுறுத்தினாரா?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த செய்திகளை அசோக் கெலாட் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் யார் என்பதை அறிவிப்பதில் அக்கட்சி படுதீவிரமாக உள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தமது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் நியமிக்கப்படவில்லை. இது காங்கிரஸ் கட்சியினரிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்சித் தலைவர் பதவி தொடர்பாக 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியும் பார்த்தனர். ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. அகில இந்திய தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகிய மூவரில் ஒருவர்தான் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்கின்றனர். ஆனால் சோனியா காந்தி குடும்பம் இதனை திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது.
சோனியா காந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைவர் பதவியை நிராகரித்தால் கட்சியின் சீனியர் ஒருவர் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும். இந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெயர் அடிபடுகிறது. காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 2 முறை பதவி வகித்தார். அதன் பின்னர் தமிழர் ஒருவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வாய்ப்பிருக்கிறது என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை சோனியா காந்தி நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை அசோக் கெலாட் ஏற்க வேண்டும் என சோனியா வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அசோக் கெலாட்டோ, ராகுல் காந்திதான் தலைவராக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
இது தொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில், என்னை அகில இந்திய தலைவராக்க வேண்டும் என சோனியா வலியுறுத்தினார் என்பதையே ஊடகங்களைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். எனக்கு கட்சி என்ன பணி கொடுத்துள்ளதோ அதை நான் முழுமையாக நிறைவேற்றி கொண்டிருக்கிறேன். குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்றார்.












Click it and Unblock the Notifications