மகிழ்ச்சியான செய்தி... ஜோராக தொடங்கியது தென்மேற்குப் பருவமழை... கேரளாவில் 27முதல் ஆட்டம் ஆரம்பம்
தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே கேரளத்தில் மே 27ல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்லி: தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே கேரளத்தில் மே 27ல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தென் மேற்கு பருவமழை பெய்யக்கூடும்.
210 சவரன் போலி நகைகள்... சென்னை வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி - 4 ஆண்டுக்கு பின் சிக்கிய பலே கும்பல்
இந்தியாவின் பல பகுதிகளுக்கு இந்த தென்மேற்கு பருவமழை முக்கியமானதாகும். ஆண்டு தோறும் ஜூன் மாத முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் இருந்து தொடங்குவது வழக்கமாகும்.
தென்மேற்குப் பருவமழை
இந்தியாவுக்கு பெருமளவு மழை தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கிறது. இந்தியாவின் விவசாய வருமானத்திற்கு இந்த பருவமழையே முக்கிய காரணியாக உள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டு மிகக்கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வட இந்தியாவில் 49 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் தென்மேற்கு பருவமழையை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தொடங்கியது தென்மேற்குப் பருவமழை
தெற்கு அந்தமான் கடலில் நேற்றைய தினமே தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெற்கு அந்தமான் கடலில் பருவமழை தொடங்கியுள்ளது.
காற்றின் வேகம் அதிகமாகும்
தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அடுத்த 2-3 தினங்களில் அந்தமான் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது.
கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு பகுதியில் நிலவும் சுழல் மற்றும் புயல் காரணமாக இன்னும் 5 நாட்களில் லட்சத்தீவு, தமிழகம் மற்றும் கேரளாவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். தெற்கு கர்நாடகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 27முதல் கேரளாவில் ஆரம்பம்
கேரளாவில் அதிக மழை பொழிவை வழங்கும் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நான்கு நாட்களுக்கு முன்னதாக அதாவது வரும் 27 ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நிரம்பி வழியும் நீர் நிலைகள்
நாடு முழுவதும் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் அபரிமிதமாகவே பெய்து நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவிலேயே இருக்கும் என்று கணித்துள்ளது.
நாடு முழுவதும் மழை
கேரளாவில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் அதிக மழையைக் கொடுக்கும். கர்நாடகா, கோவா, ஒடிசா, மகாராஷ்டிரா என வட இந்தியாவை நோக்கி மழை பரவத் தொடங்கும். வட மாநிலங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பருவமழையை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
தென்மேற்கு பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 70 சதவீத வருடாந்திர மழை கிடைக்கிறது. தென் மேற்கு பருவ மழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது. இந்திய மக்களின் வருமானத்தில் பாதியளவு விவசாயம் சார்ந்தே உள்ளது. இந்தியாவின் வேளாண் உற்பத்தியில் 50% கோடைகால பயிர்களாகவே உள்ளன. அவை பருவமழையையே சார்ந்திருக்கின்றன. இந்த ஆண்டு தென்மேற்குப்பருவமழை சில நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.