இலங்கையை விட்டு திடீரென வெளியேறிய கோத்தபாய ராஜபக்சே! நேபாளத்தில் மனைவியுடன் முகாம்!
டெல்லி: இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க நேற்று பதவியேற்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே திடீரென நேபாளம் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோத்தபாய ராஜபக்சே மனைவியுடன் தற்போது நேபாளத்தில் முகாமிட்டுள்ளார். இலங்கைக்கு எப்போது கோத்தபாய ராஜபக்சே திரும்புவார் என்பது தெரியவில்லை என்கின்றன கொழும்பு தகவல்கள்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயக்க நேற்று பதவியேற்றார். இலங்கையில் ஜனாதிபதியாக, பிரதமராக கோலோச்சி பல லட்சம் ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த ராஜபக்சேக்களின் வாரிசான நாமல் ராஜபக்சேவுக்கு ஜனாதிபதி தேர்தலில் பெரும் தோல்விதான் கிடைத்தது. ராஜபக்சேக்களின் கோட்டையான அம்பந்தோட்டையிலும் கூட அனுர குமார திசநாயக்கதான் அதிக வாக்குகளைப் பெற்றார்.

இலங்கையில் தங்களது செல்வாக்கு முடிவுக்கு வந்ததை உணர்ந்து கொண்ட ராஜபக்சேக்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் ஏற்கனவே இலங்கையை விட்டு தப்பி வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டனர். ராஜபக்சேக்களின் கூட்டாளிகளாக செயல்பட்டு அட்டூழியங்களை அரங்கேற்றியவர்களும் துபாய், இந்தியா என பல நாடுகளுக்கு தப்பிவிட்டனர்.
இலங்கையில் இத்தகைய பரபரப்புகளுக்கு இடையே முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே திடீரென நேபாள நாட்டுக்கு மனைவியுடன் சென்றார். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் தற்போது முகாமிட்டுள்ள கோத்தபாய ராஜபக்சே, பல்வேறு புத்த வழிபாட்டு தலங்களுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் எப்போது கோத்தபாய ராஜபக்சே இலங்கைக்கு திரும்புவார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
நேபாளத்தைச் சேர்ந்த சவுத்ரி குழுமம், இலங்கையில் பெருமளவு வங்கி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்துள்ளது. இந்த குழுமத்தின் அழைப்பின் பேரிலேயே கோத்தபாய ராஜபக்சே, நேபாளம் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் கோத்தபாய ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் அப்போது மனைவியுடன் முதலில் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார் கோத்தபாய. பின்னர் ஒவ்வொரு நாடாக தஞ்சம் கேட்டு அலைந்து எந்த நாடும் அடைக்கலம் தர மறுத்ததால் வேறுவழியே இல்லாமல் இலங்கைக்கு திரும்பி அரசியல் துறவறம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications