லோக்சபா தேர்தலுக்கு நிலைய வித்வான் 'சுனில்' இல்லைதான்.. காங்கிரஸின் 2024 ஸ்கெட்சே வேற லெவலாமே!
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆஸ்தான தேர்தல் வியூக வல்லுநர் சுனில் கனுகோலுவை பயன்படுத்தவில்லையாம்; 2024-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல்களுக்கான பணிகளில் மட்டுமே சுனிலை ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தேர்தல் அரசியலில் புதிய அத்தியாயமாக இணைந்திருப்பவர்கள் தேர்தல் வியூகம் வகுக்கும் வல்லுநர்கள்தான். ஒவ்வொரு மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் இத்கைய தேர்தல் வியூக வல்லுநர்களை பயன்படுத்துவது ஒரு வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரு கட்சிகளுமே தேர்தல் வியூக வல்லுநர்களான பிரசாந்த் கிஷோர், சுனில் ஆகியோரை பயன்படுத்தி இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சுனில் கனுகோலுவை ஆஸ்தான தேர்தல் வியூக வல்லுநராக பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் சுனிலை முழுமையாக நம்பியது காங்கிரஸ். சுனில் வகுத்து கொடுத்த வியூகத்தால்தான் கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு பரிசாக சுனிலுக்கு முதல்வர் சித்தராமையாவின் அரசியல் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டது. இது கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையாது. கர்நாடகாவைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் காங்கிரஸ் வாகை சூட சுனிலின் வியூகங்களே கை கொடுத்தது.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கியிருக்கிறது. இத்தேர்தலில் சுனில் முழுமையாக கவனம் செலுத்தாமல் வெறும் ஆலோசனைகளை மட்டும் வழங்குகிற மேற்பார்வையாளராகத்தான் இருக்கப் போகிறாராம். அதே நேரத்தில் சுனிலுக்கு காங்கிரஸ் மேலிடம் வேறு அசைன்மெண்ட்டுகளை இப்போதே கொடுத்திருக்கிறதாம்.
2024-ம் ஆண்டு ஆந்திரா, ஒடிஷா, சிக்கிம், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி கட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வெல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் உள்ளதாம். இந்த ஆண்டின் இறுதியில் அதாவது அக்டோபர், டிசம்பரில்தான் இம்மூன்று மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. ஆனாலும் இப்போதே 3 மாநில அரசியல் களத்தில் காங்கிரஸின் செல்வாக்கை சரி செய்யவும் அம்மாநிலங்களில் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கவும் சுனிலை களமிறக்கிவிட்டதாம் டெல்லி மேலிடம். அதனால்தான் லோக்சபா தேர்தலில் சுனில் சற்று ஒதுங்கி நிற்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications