விடாது துரத்தும் கறுப்பு..அதிமுக பொதுக்குழு தீர்மானம்- ஓபிஎஸ் அப்பீல் மனு மீது ஜன.16-ல் விசாரணை!
டெல்லி: அண்ணா திமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையை ஜனவரி 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
அண்ணா திமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகார மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி சென்னையில் இபிஎஸ் தரப்பு (எடப்பாடி பழனிசாமி) அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி ஒற்றை தலைமை உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றின. மேலும் ஓபிஎஸ்ஸை (ஓ.பன்னீர்செல்வம்) அதிமுகவில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பு மனுக்களை டிஸ்மிஸ் செய்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு, கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி இந்த உத்தரவை பிறப்பித்தார். அப்போது, பொதுக்குழுவின் 2400 உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர். அதனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் அவர் தீர்ப்பளித்தார்.
இதற்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என கூறி ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனுவையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் டிஸ்மிஸ் செய்தது. அதாவது, அதிமுக ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது; அப்படியான நிலையில் பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என்பது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு. இத்தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. லோக்சபா பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; இதற்காக மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்கவும் ஓபிஎஸ் தரப்பு கோரியது. இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி பெஞ்ச், இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களது தரப்பையும் கேட்க கோரும் கேவியட் மனுவையும் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications