சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை!
டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். வரும் 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் இருந்தது.
அரபிக் கடலில் சீனாவுக்கு எதிராக வியூகம்: ஓமன் பாதுகாப்பு செயலாளர் 6 நாட்கள் பயணமாக இந்தியா வருகை!
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழுக் கூட்டத்தில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டது.
அலகாபாத் நீதிபதி
இதையடுத்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு நவம்பர் 22ல் பொறுப்பேற்றார்.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பணியிடம் காலியாக இருந்ததால் பொறுப்புத் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொண்டு வந்தார். இவருக்கு 2022 செப்டம்பர் 12ம் தேதி வரை பதவிகாலம் உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள முனிஷ்வர் நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
முனீஷ்வர்நாத் பண்டாரி
1983-ம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார் மூனீஷ்வர்நாத் பண்டாரி. இவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சிவில், சேவை, தொழிலாளர், குற்றவியல், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அரசமைப்பு போன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார். மேலும், இவர் ராஜஸ்தான் அரசின் வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தித்துறையின் வழக்கறிஞராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியிருக்கிறார்.
சர்ச்சை
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி மாற்றப்பட்டதற்கு அப்போது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பணியிட மாற்றத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கொலிஜியத்துக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனாலும் அவர் மாற்றப்பட்டு முனீஷ்வர்நாத் பணியமர்த்தப்பட்டார்.