மோசடி வழக்கில் கேடி ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை ரெடி: சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு
டெல்லி: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான விசாரணை நிறைவடைந்துவிட்டது; இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையும் தயாராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ3 கோடி மோசடி செய்தார் ராஜேந்திர பாலாஜி என்பது வழக்கு.
அதிரடி காட்டிய டெல்லி.. சரித்திர முடிவு.. “உயிர் உள்ளவரை காங்கிரஸ்” உணர்ச்சிபொங்க பேசிய ரூபி மனோகரன்
தப்பி ஓட்டம்
இந்த மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க நீதிமன்றங்களில் முன் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்து பார்த்தார் ராஜேந்திர பாலாஜி. ஆனால் எந்த நீதிமன்றமும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கவில்லை. இதனால் கைது செய்யப்படுவோம் என்கிற அச்சத்தில் தமிழ்நாட்டைவிட்டே தப்பி ஓடினார் கேடி ராஜேந்திர பாலாஜி.
கர்நாடகாவில் கைது
இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கேடி ராஜேந்திர பாலாஜியை வலைவீசி போலீசார் தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டை 18 நாட்களாக நீடித்தது. ஒருவழியாக கர்நாடகாவில் பதுங்கி இருந்த நிலையில் கேடி ராஜேந்திரபாலாஜி பிடிபட்டார். இதனால் 18 நாட்கள் நீடித்த பரபரப்பு ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட கேடி ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் கொடுத்ததால் வெளியே வந்தார்.
கிடுக்குப்பிடி விசாரணை
உச்சநீதிமன்ற நிபந்தனைகளின்படி தொடக்கத்தில் விருதுநகரிலேயே முடக்கப்பட்டிருந்தார் கேடி ராஜேந்திரபாலாஜி. அப்போது விசாரணைக்காக தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி ஆஜராகி வந்தார். அவரிடம் அதிகாரிகள் நூற்றுக்கணக்கான கேள்விகளை பல மணிநேரம் இடைவிடாமல் தொடர்ந்து கேட்டனர். பின்னர் தமிழகத்தைவிட்டு எங்கேயும் தப்பி செல்லக் கூடாது என நிபந்தனை தளர்த்தப்பட்டது. இவ்வழக்கில் தமக்கான நிபந்தனைகளை மேலும் தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி மீண்டும் மனுத் தாக்கல் செய்தார்.
குற்றப்பத்திரிகை ரெடியாம்
இது தொடர்பாக நடைபெற்ற இன்றைய விசாரணையின் போது, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துவிட்டன. ராஜேந்திர பாலாஜி மீதான இந்த மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 45 நாட்களில் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள்ளது.
ராஜேந்திர பாலாஜி மனு டிஸ்மிஸ்
மேலும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் கோரியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில் மேலும் தளர்வு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தற்போதைய நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட இருப்பதால் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடி மீண்டும் அதிகரித்துள்ளது.