"கேலிக்கூத்து.." கொரோனா இறப்புகளுக்கு இழப்பீடு தராத மாநில அரசுகளை சாடிய உச்சநீதிமன்றம்
டெல்லி: கொரோனா காரணமாக ஏற்படும் இறப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் செய்து வரும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் அரசுகளை நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 வழங்க, உச்சநீதிமன்றம், கடந்த அக்டோபரில் ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது மகாராஷ்டிர அரசு இது தொடர்பாக தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளிப்படுத்தியது.

திருப்தியில்லை
"மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நாங்கள் சிறிதும் திருப்தியடையவில்லை. மகாராஷ்டிராவில் 1 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் 37,000 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு கூட இழப்பீடு வழங்கப்படவில்லை" என்று நீதிபதி எம்.ஆர்.ஷா கூறினார். இது "கேலிக்குரியது" மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் மேலும் கூறினார். இதையடுத்து மகாராஷ்டிரா அரசு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, 19,000 க்கும் மேற்பட்ட கொரோனா, இறப்புகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் 467 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அவர்களில் 110 பேருக்கு மட்டுமே இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தலையீடு
உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கிய பிறகே பெரும்பாலான மாநில அரசுகள் ஆன்லைன் போர்டல்களை டிசம்பர் 3- தேதிக்குப் பிறகு அமைத்துள்ளன என்று நீதிமன்றம் மேலும் கூறியது. "நீதிமன்றங்கள் கட்டாயப்படுத்திய பின்னரே மாநில அரசுகள் விழித்துக்கொண்டு ஆன்லைன் போர்ட்டல்களை அமைத்தன" என்று நீதிபதி ஷா குறிப்பிட்டார்.

இழப்பீடு வழங்கவில்லை
ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தளவில், 9,000 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 595 விண்ணப்பங்கள் மட்டுமே இதுவரை பெறப்பட்டுள்ளன. இதுவரை யாருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம் செய்ய வேண்டும்
இந்த இழப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் பரவலான விளம்பரத்தை உறுதி செய்ய இந்த மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது, இதனால் அதிகமான மக்கள் இழப்பீடு பற்றி தெரிந்து கொண்டு கேட்க முன்வர முடியும். இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 10ம் தேதி நடைபெறும்.












Click it and Unblock the Notifications