ஆளுநர் ரவிக்கு தனி விதிகளா?12 மசோதாக்களை நிறுத்தியது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி-கடும் கண்டனம்
டெல்லி: தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 12 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது ஏன்? ஜனாதிபதிக்கு 2 மசோதாக்களை மட்டும் பரிந்துரைத்தது ஏன்? என்று சரமாரி கேள்விகளை எழுப்பி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனுக்கள் மீதான விசாரணை நாளையும் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தது. மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பது, துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பர்திவாலா பெஞ்ச், தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அறிவுறுத்தி இருந்தது. இதனையடுத்து இன்றும் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது, ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்துக்கு எதிராக எப்படியெல்லாம் செயல்படுகிறார் என தமிழ்நாடு அரசு தரப்பில் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதங்களை முன்வைத்தார்.
இதனையடுது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு 2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்துவிட்டு ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கலாமா? என கேள்வி எழுப்பினர். இப்படி 12 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளாரே.. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஏன் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்? என்பதற்கு பதில் தேவை. மசோதாக்கள் மீதான ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்துதான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளுநர் ஏன் 2 மசோதாக்களை மட்டும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்? என்பதற்கும் ஆளுநர் தரப்பில் விளக்கம் தரப்பட வேண்டும். இப்படி ஆளுநர் செயல்படுவதால் மத்திய அரசின் ஏஜெண்டாக ஆளுநர் இருக்கிறார் என்கிற வாதம் சரி என்பதாகவே அமைந்துவிடுகிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேபோல, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கு என தனி விதிகளை உருவாக்கிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்; ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவையே செல்லாததாக்கிவிடும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
அத்துடன் ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைப்பதற்கான காரணங்கள், இப்படி கிடப்பில் போட்டு வைக்க யாருடன் ஆலோசனை நடத்தினார்? யாரிடம் அறிவுரை பெற்றார்? உரிய காரணங்கள் இல்லாமல் ஆளுநரால் மசோதாக்களை நிறுத்தி வைக்க முடியாது; ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க காரணமான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் நாளைக்குல் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கெடு விதித்தனர். இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் பதிலளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் அரசியல் சாசனத்தின் 200, 201-வது பிரிவு இருக்கும் வரை ஆளுநர் பதவியை யாராலும் அகற்றிவிட முடியாது என சுட்டிக்காட்டி பழைய நிகழ்வுகளை ஆளுநர் தரப்பு முன்வைக்க தொடங்கியது. ஆனால் அப்போது குறுக்கிட்ட நீதிபதிகளோ, எங்களுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வுகள் தேவை; மசோதாக்கள் மீதான ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பான காரணங்கள், விளக்கங்கள் மட்டுமே தேவை என அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டினர்.












Click it and Unblock the Notifications