"பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்" 58 மனுக்களும் தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 மனுக்களையும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும், பொருளாதார ரீதியாக கொள்கை முடிவு என்பதால், அதனை திரும்பப் பெற உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ல் பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது ஒரே இரவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதாவது புழக்கத்தில் இருந்த 85 சதவிகித நோட்டுகள் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து ஏராளமானோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
முடிந்துபோன விஷயம்.. கிளற வேண்டாம்.. பணமதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசு வாதம்
இன்று தீர்ப்பு
நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்திருந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி அப்துல் நசீர் ஜன.3ம் (நாளை) தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக பணமதிப்பிழப்பு குறித்து தீர்ப்பு அளித்துள்ளது.
ஆவணங்கள் சமர்பிக்க உத்தரவு
இந்த அரசியலமைப்பு அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன், மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் உள்ளனர். கடந்த டிச.7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தனது தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. அப்போது நீதிமன்றம் 2016இல் அறிவிக்கப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு கொள்கை தொடர்பான அனைத்து ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு மத்திய மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. அனைத்து பதிவுகளும் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்படும் என அட்டர்னி ஜெனரல் அப்போது கூறியிருந்தார்.
ப.சிதம்பரத்தின் வாதம்
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம், பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார். பணமதிப்பிழப்பு அறிவிப்பில் அரசு பின்பற்றிய செயல்முறை குறைபாடுடையது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர் வாதிட்டார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது என்று தனது வாதத்தில் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் தான் பணமதிப்பிழப்பு செய்ய அரசுக்கு அதிகாரமும் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், அதற்குப் பதிலாக இங்கு தலைகீழான நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும் வாதிட்டார்.
ரிசர்வ் வங்கி வாதம்
இந்த வழக்கு விசாரணையில் ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பின் போது, சில கஷ்டம் இருந்ததை ஒப்புக்கொள்வதாகவும் இருப்பினும், அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தெரிவித்தது. இது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்பதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது எனவும் வாதிட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், பொருளாதாரக் கொள்கைகள் எனக் கூறி எங்களை கட்டிப்போட முடியாது. பொருளாதாரம் சார்ந்த முடிவு என்பதற்காக அது செயல்படுத்தப்படும் விதங்களை நாங்கள் கையை கட்டிகொண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மத்திய அரசு வாதம்
அதேபோல மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவு என்றும், போலி ரூபாய் நோட்டுகள், பயங்கரவாத நிதி செல்வது, கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்த பணமதிப்பிழப்பு என வாதிட்டது. அதேபோல பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு நல்ல பலன்கள் இருந்ததாகவும் இதனால் பணமதிப்பிழப்பைத் தோல்வி எனக் கருத முடியாது என்றும் கூறியிருந்தது.
பணமதிப்பிழப்பு செல்லும்
இந்த நிலையில் பணமதிப்பிழக்கு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 மனுக்களும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது பொருளாதார ரீதியாக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு என்பதால், திரும்பப் பெற முடியாது என்றும், ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படியே மத்திய அரசு செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.